Tuesday, December 15, 2009

ஓர் ஆங்கிலேயரின் பின்காலனிய இந்திய மனச்சுமை
அந்தச் சிறைச்சாலையின் காம்பௌண்ட் சுவரை ஒட்டிய தரையில், ஒரு சவப்பெட்டியை இறக்குவதற்கு ஏற்ற வகையில், ஒரு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அதில் அவசர அவசரமாக ஒரு சவப்பெட்டி இறக்கப்பட்டது. சமயச்சடங்குகள் இல்லை; உறவினர்களின் கண்ணீர் இல்லை. சொல்லப்ப்போனால், சவப்பெட்டியில் அடக்கமாகியிருந்த அந்தச் சவத்தின் உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே தெரியாது. அந்தச் சவ அடக்கத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில சிறை அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். சவ அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தில் எவ்வித அடையாளச்சின்னங்களோ பொறிக்கப்படவில்லை. விரைவிலேயே அந்த இடத்தில் புல் வளர்க்கப்பட்டு அந்த இடம் சுற்றி இருந்த புல் தரையோடு தரையாக ஆக்கப்பட்டது. இப்போது அந்த இடத்தில் ஒரு சவம் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என்று யாராலும் யூகிக்கவே முடியாது..... இப்படி ஆரம்பீக்றது வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய, தி லாஸ்ட் மொகல் (The last Mohul) வரலாற்று நூல். இந்தியாவை ஆண்ட மொகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரான பகதூர் ஷாவுக்குத்தான் இந்த கதி நேர்ந்தது. தனது கடைசிக் காலத்தில் பிரிட்டிஷ்காரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, ராஜ துரோகககுற்றத்துக்காக பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கே தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு இறுதியாக சிறையிலேயே உயிர் துறந்த அவரது உடல்தான் இவ்விதம் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது. ஒரு நாயின் உடலைக் கூட நினைவுச்சின்னம் அமைத்து நினைவு கூரும் வெள்ளையர்கள் ஒரு மாபெரும் சக்கரவர்த்தியை இவ்விதம் அவமதித்தார்கள். ஒரு இந்தியன் இந்த நிகழ்ச்சியை எப்படிப் பார்ப்பானோ அப்ப்டிப் பார்த்து, ஒரு இந்திய மனநிலையில் இந்தக் காட்சியைப் பதிவு செய்கிறார் டேல்ரிம்பிள்.
ஸ்காட்லாந்தில் 1965ம் ஆண்டு பிறந்த இந்த மனிதர் பிரபல ஆங்கில எழுத்தாளரான வர்ஜீனியா உல்ஃபின் ஒன்று விட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. வறண்ட தன்மை கொண்டவை என்று கருதப்படும் வரலாற்றுப் புத்தகங்களை ஒரு புனைவுக்குரிய தன்மையோடு ரசிக்கும் விதமாக எழுதுபவர் டேல்ரிம்பிள். ரொலாண் பார்த் சொல்லும், ‘பிரதி தரும் இன்பம்’ இவரது பிரதிகளில் நிச்சயம் உண்டு. ஒரு இந்தியனை விட மிக அதிகமாக இந்தியாவைப் பற்றி அறிந்தவர்; இந்தியாவை நேசிப்பவர் என்று இவரைச் சொல்லலாம். இவர் இவரது நாட்டில் வாழ்ந்த காலங்களை விட இந்தியாவில் அலைந்து திரிந்த நாட்களே அதிகம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் டெல்லியிலும், ஹைதராபாத்திலும் நடந்த பல சுவாரஸ்யமான வரலாற்றுச் சம்பவங்களை இவரது பேனா மிக அழகாகப் பதிவு செய்து விடுகிறது. டெல்லியிலும், ஹைதராபாத்திலும் அந்தப்புரங்கள் எப்படி இருந்தன; அங்கு நிலவி இருந்த கடுமையான் கட்டுப்பாடுகளை மீறி எப்படி ஒரு நிஜாமின் மைத்துனி ஒரு பிரிட்டிஷ் அதிகாரியைக் காதலித்து ரகசியமாக உடலுறவு கொண்டு கர்ப்பமானாள் அதன் விளைவாக இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு எப்படி அதிர்ந்து போனது போன்ற விவரங்களைத் தனது ‘ஒயிட் மொஹல்ஸ்’ (White Mohuls) என்ற நூலில் ஆவணப்படுத்துகிறார். இவர் புத்தகங்களில் வரும் விபரங்கள் இது வரை யாரும் அறியாதவை.வரலாற்றின் பக்கங்களில் விடுபட்டுப்போனவை. ஒரு மாற்று வரலாற்றை உருவாக்குபவை. நான் ஹைதராபாத்துக்குப் பல முறை சென்றிருக்கிறேன். அங்குள்ள பேகம் கார்டனைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அது யாரோ ஒரு நிஜாம் காலத்து ராஜகுமாரியின் தோட்டம் என்று சர்வ சாதாரணமாகப் பார்த்து விட்டுக் கட்ந்து போயிருக்கிறேன். டேல்ரிம்பிளின் ஒயிட் மொஹல் என்ற நூலைப் படிக்கும் போது ஒரு புறக்கணிக்கப்பட்ட காதல் வரலாறு தெரிய வருகிறது. அந்த பேகத்தின் பெயர் கைரூன்னிஸா. பேரழகியான (அவளது படம் அட்டையில் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் அவள் பேரழகிதான்.) அவள் ஹைதராபாத் நிஜாமின் பிரதம மந்திரியின் மைத்துனி. ஜேம்ஸ் கிர்க்பேட்ரிக் என்ற பிரிட்டிஷ் அதிகாரியை அவள் எப்ப்டி காதல் வலையில் வீழ்த்தினாள்; அந்தக் காதல் இறுதியில் என்ன ஆனது என்பது போன்ற விவரங்கள் அதில் இருக்கின்றன. டேல்ரிம்பிளின் ‘சிடி ஆஃப் ஜின்ஸ்’, ‘தி ஆஜ் ஆஃப் காளி’ போன்ற பிற நூலகளும் வியப்பைத் தரும் தகவல்கள் கொண்டவையே. இவரது புத்தகங்கள் சென்ற நூற்றாண்டின் பாழ்பட்ட இந்திய வசீகரத்தை நினைத்து ஏங்குகின்றன. அவற்றில் டேல்ரிம்பிளின் பின் காலனிய மனச்சுமை தெரிகிறது. ஒரே நேரத்தில் ஐந்து, பத்து என்று தங்கள் புத்தகங்களைப் போட்டி போட்டு கொண்டு வெளியிடும் நமது தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லாத பின் காலனிய மனச்சுமை ஒரு ஆங்கில எழுத்தாளருக்கு இருப்பது ஒரு நகை முரண் என்றே சொல்லத்தோன்றுகிறது.
*****
ஜெயந்தி சங்கரின் மீன் குளம்
முப்பத்து மூன்று சிறார் சீனக்கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவற்றை ஜெயந்தி சங்கர் மொழிபெயர்த்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் சீனப்பின்புலத்துடன் இருக்கின்றன. தமிழில் இப்போது சிறுவர் இலக்கியம் என்பது மருந்துக்கும் இல்லை. சிறுவர்கள் கூட பெரியவர்களுக்கான கதைகளையே எழுத விரும்புகிறார்கள். பெரியவர்களான ஜெயமோகன் போன்றவர்களோ சிறுவர் கதை என்ற பெயரில் மூத்த குடிமகன்கள் படிக்க வேண்டிய கதைகளை எழுதி சிறியவர் பெரியவர் அனவரையும் பயமுறுத்துகிறார்கள்.இத்தகைய வறண்ட சூழலில் ஜெயந்தி சங்கரின் மீன் குளம் தொகுப்பு படிப்பதற்கு உற்சாகம் தருகிறது. சின்னஞ்சிறு கதைகள், குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் எளிய இனிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன.இக்கதைகளில் வழக்கம் போலவே தேவ தூதர்கள், அரிசியால் நடை பாதை அமைக்கும் செல்வந்தன், நம் ஊர் அட்சயபாத்திரத்துக்கு ஈடான ஒரு பாத்திரம் கிடைக்கப்பெறும் ஏழை, பேசும் டிராகன்கள், பேத்திக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் தாத்தா என்று நிறைய கதாபாத்திரங்கள். இத்தொகுப்பைப் படிக்கும் போது தமிழில் இது போன்ற சிறுவர் கதைகள் இப்போதெல்லாம் வருவதில்லையே என்ற ஏக்கம் தோன்றுகிறது. என்னுடைய இளமைக்காலத்தில் அம்புலிமாமா, க்ண்ணன் போன்ற சிறுவர்களுக்கான பத்திரிகைகள் வரும். முதலில் சிறுவர்களுக்கான இதழ்களைப் படிப்பதன் மூலம் தான் ஒரு இளம் வாசகன் உருவாக முடியும். அவன் அடுத்த கட்டத்தில் பெரிய வாசிப்புக்குத் தயாராவான். ஆங்கிலத்தில் கூட சிறுவர்களுக்கான கதைகள், பதினம வயதினருக்கான ஜேன் ஆஸ்டின் கதைகள், வாலிப வயதினருக்கான ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் போன்றவர்களின் கதைகள், முதிர்ந்த வாசகர்களுக்கான இர்விங் வாலஸ், அய்ன் ராண்ட் போன்றோரின் கதைகள் எழுதப்படுகின்றன. இதனால் வாசகன் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. மில்லியன் கணக்கில் வாசகர்கள் எண்ணிக்கை உயர வழி கிடைக்கிறது. இங்கே அது போன்ற வாசிப்புக்கான தளம் இல்லை. ஆறு வயசுச் சிறுவன் முதல் அறுபது வயது பெரிசு வரை அனவருக்கும் படிக்கக் கிடைப்பது நமீதாவின் மார்பு பிதுங்கிய அட்டைப்படம் தாங்கிய வணிகப் பத்திரிகைகள் மட்டுமே. இதனால்தான் பிஞ்சில் பழுத்த சிறுசுகளும், விடலைத்தனமான பெரிசுகளும் இங்கே வாசகர்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர் தப்பித்தவறி சிறுபத்திரிகைகள் பக்கம் நகர்கிறார்கள். என்வே, இப்போதைய சூழலில் தமிழில் சிறுவர்களுக்கான எழுத்துக்கள் எழுதப்பட வேண்டும். பாடப்புத்தகங்களுடன் இலக்கியமும் சேர்ந்து படிக்கும் பழக்கம் அப்போதுதான் அவர்களுக்கு வரும். அந்தப் பழக்கம் அவர்கள் வளர, வளர தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். வெறும் பாடப்புத்தகங்களைக் கட்டிக் கொண்டு மாரடிக்கும் அவல நிலை அவர்களுக்கு நேராது. பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும் ஒரு புத்தக உலகம் இருப்பது அவர்களுக்குத் தெரிய வரும். அது அவர்களை சுய சிந்தனை உள்ள நல்ல குடிமகன்களாக மாற்றும். ஜெயந்தி சங்கருக்கு குழந்தைகளுக்குக் கதை சொல்லும் மொழி கைவந்திருக்கிறது. அவரே கூட தமிழில் ஒரு நல்ல சிறுவர் கதைத் தொகுப்பை எழுதித் தந்து ஒரு புதிய வாசலைத் திறந்து வைக்க முடியும்.
*****

Monday, December 14, 2009

on parody
எனது இடுகையை வாசித்து உடன் தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் செய்திருக்கும் அர்விந்த் செல்லைய்யா மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் என் நன்றிகள். நிற்க. ’பகடி’ பற்றி. வாழ்க்கையால் பாதிக்கப்படும் மனிதன் பதிலுக்கு வாழ்க்கையை பாதிக்க விரும்புகிறான். அவன் முன்னால் மூன்று சாத்தியங்கள் உள்ளன. ஒன்று புரட்சிக்காரன் ஆவது; இரண்டு துறவியாவது; மூன்று: கலஞன் ஆவது.இந்த மூன்றில் உணர்ச்சி வசப்படுபவர்கள் கலைஞர்கள் ஆகிறார்கள். மறறவர்கள் தங்கள் மன நிலைக்கேற்ப துறவியாகவோ புரட்சிக்காரனாகவோ மாறுகிறார்கள். இவர்களை இப்படி மாற்றுவது அதிகாரத்தின் உரையாடல் என்பது மிக முக்கியமானது. வாழ்க்கையால் பாதிக்கப்படுபவர்களில் இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள். அவர்கள் விளிம்பு நிலை மக்களே. இவர்கள் சிறப்புரிமை மறுக்கப்பட்டவர்கள். புறக்கணிப்பின் வலியை உணர்ந்தவர்கள். கறுப்பு நிற ஆப்பிரிக்க மக்கள், தலித்துகள் போன்ற பலரை நாம் விளிம்பு நிலை மக்களாகப் பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட மக்க்ளான கலைஞர்களும், பாதிக்கப்பட்ட மக்களான விளிம்பு நிலை மக்களும் ஒரே தட்டில் உள்ளவர்களே. அப்படி இருக்கையில் இவர்கள் இருவரது குரல்களும் தங்களுக்கு எதிரான அதிகாரத்தின் உரையாடலை நோக்கித்தான் இருக்க வேண்டுமே தவிர, தங்களுக்குள்ளேயே இருக்கக் கூடாது. அந்த எதிர் உரையாடலில் ஒன்று ‘பகடி’. சார்லி சாப்ளினின் பகடி அவர வாழ்ந்த காலத்து அதிகாரத்தின் உரையாடலுக்கு எதிர் உரையாடலாக இருந்தது. அமெரிக்கப் பின் நவீன எழுத்தாளரான ஜெர்ஸி கோஸின்ஸ்கியின்,Being there என்ற நாவல் அமெரிக்க அதிகாரத்தின் உரையாடலுக்கு எதிரான பகடியை அற்புதமாக நிகழ்த்திக் காட்டுகிறது. ஹாலிவுட் இயக்குனரான உடி ஆலனின் படங்களில் இடம் பெறும் அமெரிக்காவுக்கு எதிரான பகடிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. பகடி செய்வது கலைஞனின் உரிமை. அந்த பகடி அதிகாரத்தின் உரையாடலுக்கு எதிரான மாற்று உரையாடலை உருவாக்குவதாக இருக்க வேண்டும். உரிமை மறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, அவல வாழ்க்கை வாழ நேர்ந்த விளிம்பு நிலை மக்களைப் பகடி செய்வது அதிகாரத்தின் உரையாடலை வழி மொழிவதாகும். என்வே, இந்த நக்கலை எதிர் - நக்கல் எனலாம். எதிர் - நக்கல் ஏற்புடையதல்ல.