Friday, August 3, 2012

########### கண்ணுக்குத் தெரியாத கண்காட்சி எம்.ஜி.சுரேஷ் லண்டனில் இருக்கும் ஹேவர்ட் காலரியில் அது நடந்தது. பார்வையாளர்கள் திகைப்பில் ஆழ்ந்தார்கள். அங்கே ஒரு பிந்தைய பின் நவீன நிகழ்வு (Post-Post modern event) அரங்கேறிக் கொண்டிருந்ததை அவர்களில் பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லை. படங்கள் இல்லாத திரைச்சீலைகள்; இல்லாமல இருந்து கொண்டிருந்த சிற்பங்கள்; கண்ணுக்குத் தெரியாத புதிர்ப்பாதைகள்; அதேசமயம், மோதிக் கொண்ட்தற்கு அடையாளமாக ஒலி எழுப்பும் சுவர்கள். படுகொலைகளை உணர்த்தும் புகை மணடலங்கள் என்று ஐம்பது கலை ஆக்கங்கள் அங்கே பார்வைக்கு (?) வைக்கப்பட்டிருந்தன. அங்கே வந்திருந்த பார்வையாளர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். இதில் ஏதோ மோசடி இருக்குமோ என்று சந்தேகித்தார்கள். அந்தக் கண்காட்சியைப் பார்ப்பதற்கு டிக்கட் வேறு விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கு பார்க்க வந்திருந்த ஒரு பத்திரிகையாளர், ‘இந்தக் கண்ணால் காண முடியாத கண்காட்சியை, கண்ணால் பார்க்க முடியாத மனிதர்கள், கண்ணால் பார்க்க முடியாத பணத்தைக் கொண்டு டிக்கட் வாங்கிதான் பார்க்க வரவேண்டும்’ என்றாராம். ‘இது ஒரு ஜோக்காக இருக்குமோ?’ என்பது இன்னொரு பார்வையாளரின் சந்தேகம். இந்தக் கண்காட்சியை நிகழ்த்திய பிரைனார்டு, டெலியா கேரி ஆகியோர் இந்த விமர்சனங்கள் குறித்துக் கவலைப்படவில்லை. கடந்த ஐம்பது ஆண்டுக்கால கலை வரலாற்றை அணிவகுக்க வைத்து விட்ட பெருமிதம் அவர்களின் முகத்தில் நிலவியது. கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டமாதிரி அலைந்து கொண்டிருந்த பார்வையாளர்களை ஒரு ஓவியம் வரவேற்றது. அந்த ஓவியத்தில் சட்டகம் இருந்தது. சட்டமிடப்பட்ட ஓர் வெள்ளைக்காகிதம் இருந்த்து. அந்தக் காகித்த்தில் ஓவியம் எதுவும் வரையப்படவில்லை. அதற்குப் பதிலாக ஒரு சிறு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. ’கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் 1000 மணி நேரம் உற்றுப்பார்க்கப்பட்ட ஓவியம் இது’ என்று அந்தக் குறிப்பு கூறியது. இதே ரீதியில் தான் அங்கே பல ஓவியங்கள், சிற்பங்கள், கலை ஆக்கங்கள் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை யாரோ அநாமதேயங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. புகழ் பெற்ற கலைஞர்களான க்ளைன், ஆண்டி வார்ஹோல், யோகோ உனோ, மாரிசோ கேட்லன் போன்றவர்களால் ஆக்கப்பட்டவை. ’இது நகைச்சுவை விளையாட்டல்ல; இது வரை எப்போதும் நீங்கள் கண்டிராத கண்காட்சி இது’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ஹேவர்ட் காலரியின் இயக்குநரான ரால்ஃப் ருகோஃப். உண்மைதான். அங்கே உலகில் உள்ள பொருட்களைப் பற்றிய கலை ஆக்கங்கள் பிரதானப் படுத்தப்படவில்லை. மாறாக அவற்றைப் பற்றிய கற்பனை உணர்வை பார்வையாளனின் மனத்தில் தட்டி எழுப்பியது. அந்த அளவில் அது ஒரு புதுமையான கண்காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஒரு கலைக் கண்காட்சி மட்டுமல்ல; ஒரு எதிர் கலைக் கண்காட்சி என்றும் சொல்ல முடியும். இது போன்ற நிகழ்வுகள் ந்டை பெறுவது இதுவே முதல் தடவை அல்ல. 1917 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓவியரான மார்சல் டுசாம்ப் ஒரு சிறுநீர் கழிக்கும் பீங்கானை ‘நீரூற்று’ என்று தலைப்பிட்டு ஓவியக் கண்காட்சியில் வைத்தபோதே இது போன்ற நிகழ்வுகளுக்கு அடித்தளம் இடப்பட்டு விட்ட்து. அவர் மோனலிசாவுக்கு மீசை வரைந்து காட்டினார். ‘கலை கலை என்று கதைத்தது போதும், இதுதானய்யா கலை உலகம்’ என்று அவர் சொல்லாமல் சொன்னார். 1914 முதல் 1918 வரை நடந்த போர் அறிவார்ந்த கலாச்சார சமூக அமைப்பை திவாலாக்கிக் காட்டியது. மதம், பகுத்தறிவு, மனித விழுமியங்கள் யாவும் நாகரிகமடைந்த நாடுகளால் கேள்வி கேட்கப்படாமல் கசாப்புக் கடைக்கு அனுப்பப்பட்டன. இந்த அபத்தம் அறிவு ஜீவிகளின் கோபத்தைத் தூண்டியது. எனவே, அவர்கள் கலைக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரும் அபத்தங்கள்; இருத்தலின் நிச்சயமின்மை; எரிச்சலூட்டும் போலித்தன்ங்கள்; இவற்றின் மீதான கோபம்; அந்தக் கோபத்தின் விளைவான எதிர் வினை என்பதாக இந்த எதிர் கலை ஓவியங்களையும் சிற்பங்களையும் கருத வேண்டும். 1915 ஆம் ஆண்டுன் ருஷ்யரான காஸிமீர் மாலேவிச் ஒரு சதுரத்தை வரைந்தார். அந்தச் சதுரத்தினுள் எந்த விவரணையும் இல்லை. ‘இது வெறும் சதுரம் மட்டும் அல்ல; பல ஓவியங்களை அது தன்னுள் சூல் கொண்டிருக்கிறது’ என்றார். அவரது பாணி சுப்ரீமாடிசம் என்று அழைக்கப்பட்டது. மாலேவிச்சின் அந்த சதுரத்துக்கு இணையாகவே ஹேவர்ட் காலரியில் வைக்கப்பட்ட ஓவியம் இல்லாத ஓவியத் திரைச்சீலையைக் குறிப்பிடலாம். ஆனால், மாலேவிச் சொன்ன காரணம் வேறு; இந்த ஓவியர் சொல்லும் காரணம் வேறு. இந்த ஓவியர் நமது யுகத்தின் வெறுமையை உருவகித்துக் காட்டுகிறார் என்பது முக்கியமானது. தெரசா மார்கோரி என்ற ஓவியர் காட்சிக்கு வைத்த பொருள் அதிர வைப்பது. மெக்சிகோவில் நடந்த ஈவிரக்கற்ற ஒரு படுகொலையை அவர் காட்சிப்படுத்தி இருக்கிறார். அவர் அவற்றைப் படங்களாகவோ, புகைப்படங்களாகவோ காட்சிப்படுத்தவில்லை. படங்கள் பார்வையாளனைத் தொடாமல் போகக்கூடும். பார்வையாளனை அந்த மெக்சிக பயங்கரம் பாதித்தே தீரவேண்டும். என்ன செய்வது? அந்த கொலை செய்யப்பட்ட உடல்கள் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த போது அவற்றைக் கழுவி அந்த நீரைச் சேகரித்தார். அந்தச் சேகரிக்கப்பட்ட நீரை ஒரு நீராவி இயந்திரத்தின் மூலம் பனிப்படலங்களாக அந்த அறையில் உலவ விட்டார். ’இந்தக் கலைப் படைப்பை நீங்கள் உங்கள் கண்களால் பார்க்க முடியாவிட்டால் என்ன, உங்கள் தோல்களால் உணர்ந்துதான் பாருங்களேன்’ என்கிறார் ருகோஃப். சரியானதுதானே? பிக்காஸோ தனது ஓவியங்கள் கண்களால் பார்க்கப்படுவதற்காக வரையப்படவில்லை; தலையால் பார்ப்பதற்காக வரையப்பட்டவை என்றார். தெரசாவோ தோல்களால் உணர்ந்து பார்க்குமாறு சொல்கிறார். ஏன் பார்க்கக்கூடாது? பின் நவீனத்துவம் தோன்றி ஐம்பதாண்டுகள் கழிந்து விட்டன. பின் நவீனத்துவம் எல்லாத்துறைகளையும் கொட்டிக் கவிழ்த்த்து. ஓவியத்துறையையும், அது விட்டு வைக்கவில்லை. ஓவியம் என்பது பொதுவாக நகலெடுக்கும் காரியமாகத்தான் இருந்து வந்தது. இம்ப்ரஷனிசம் அந்த வேலையை நிராகரித்தது. ஓவியத்தை மறைபொருள் (abstract) தன்மை கொண்ட்தாக மாற்றியது. பின் நவீனத்துவமோ இரண்டின் கூறுகளையும் ஒன்றிணைத்தது. நவீன ஓவியம் யதார்த்தத்தின் பிரதிநிதித்துவத்தை மறை பொருளாக்கியது. பின் நவீனத்துவமோ யதார்த்தத்தையும், பிரதிநிதித்துவத்தையும் ஒன்றின் மீது ஒன்றாக கவியுமாறு (overlap) செய்தது. டாடாயிசத்தின் டு சாம்ப் முதல் பாப் ஆர்ட்டின் ராபர்ட் ராஸ்சன்பர்க் வரை அனைவரும் வரைந்த ஓவியங்கள் யாவும் வெகுஜன ஓவியத்துக்கு எதிரானவையாகவே இருந்தன. அந்த அளவில் இந்த ஹேவர்ட் காலரி ஓவியங்களும் அவற்றுடன் ஒத்துப் போகின்றன. தவிரவும், அவற்றின் நீட்சியாகவும் இருக்கின்றன. இந்தக் கண்காட்சி முன் வைக்கும் ‘கண்ணுக்குத் தெரியாத’ என்ற கருத்துருவில் ஒரு உருவகம் இருக்கிறது. அது ஒரு அரசியல் சார்ந்த உருவகம். நமது யுகத்தில் ‘அதிகாரம் மேற்கொள்ளும் தகவல் மறைப்பு’, ‘அரசியல் எதிரிகளைக் காணாமல் போகுமாறு செய்தல்’’சமூகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களைக் கண்டும் காணாமல் இருப்பது’ போன்ற தடித்த தோல்தனங்களை எதிர்க்கும் கலகக் குரல் இங்கு ஒலிப்பதை நாம் உணரமுடியும். அதுவே இந்தக் கண்காட்சியை பின் நவீனத்துவத்தின் நீட்சியாக்க் காட்டுகிறது. ஒரு பிந்தைய பின் நவீன நிகழ்வாக ஆக்கிக் காட்டுகிறது. @@@@@@@@@

1 comment:

  1. அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com

    ReplyDelete