Tuesday, December 15, 2009

ஜெயந்தி சங்கரின் மீன் குளம்
முப்பத்து மூன்று சிறார் சீனக்கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவற்றை ஜெயந்தி சங்கர் மொழிபெயர்த்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் சீனப்பின்புலத்துடன் இருக்கின்றன. தமிழில் இப்போது சிறுவர் இலக்கியம் என்பது மருந்துக்கும் இல்லை. சிறுவர்கள் கூட பெரியவர்களுக்கான கதைகளையே எழுத விரும்புகிறார்கள். பெரியவர்களான ஜெயமோகன் போன்றவர்களோ சிறுவர் கதை என்ற பெயரில் மூத்த குடிமகன்கள் படிக்க வேண்டிய கதைகளை எழுதி சிறியவர் பெரியவர் அனவரையும் பயமுறுத்துகிறார்கள்.இத்தகைய வறண்ட சூழலில் ஜெயந்தி சங்கரின் மீன் குளம் தொகுப்பு படிப்பதற்கு உற்சாகம் தருகிறது. சின்னஞ்சிறு கதைகள், குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் எளிய இனிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன.இக்கதைகளில் வழக்கம் போலவே தேவ தூதர்கள், அரிசியால் நடை பாதை அமைக்கும் செல்வந்தன், நம் ஊர் அட்சயபாத்திரத்துக்கு ஈடான ஒரு பாத்திரம் கிடைக்கப்பெறும் ஏழை, பேசும் டிராகன்கள், பேத்திக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் தாத்தா என்று நிறைய கதாபாத்திரங்கள். இத்தொகுப்பைப் படிக்கும் போது தமிழில் இது போன்ற சிறுவர் கதைகள் இப்போதெல்லாம் வருவதில்லையே என்ற ஏக்கம் தோன்றுகிறது. என்னுடைய இளமைக்காலத்தில் அம்புலிமாமா, க்ண்ணன் போன்ற சிறுவர்களுக்கான பத்திரிகைகள் வரும். முதலில் சிறுவர்களுக்கான இதழ்களைப் படிப்பதன் மூலம் தான் ஒரு இளம் வாசகன் உருவாக முடியும். அவன் அடுத்த கட்டத்தில் பெரிய வாசிப்புக்குத் தயாராவான். ஆங்கிலத்தில் கூட சிறுவர்களுக்கான கதைகள், பதினம வயதினருக்கான ஜேன் ஆஸ்டின் கதைகள், வாலிப வயதினருக்கான ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் போன்றவர்களின் கதைகள், முதிர்ந்த வாசகர்களுக்கான இர்விங் வாலஸ், அய்ன் ராண்ட் போன்றோரின் கதைகள் எழுதப்படுகின்றன. இதனால் வாசகன் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. மில்லியன் கணக்கில் வாசகர்கள் எண்ணிக்கை உயர வழி கிடைக்கிறது. இங்கே அது போன்ற வாசிப்புக்கான தளம் இல்லை. ஆறு வயசுச் சிறுவன் முதல் அறுபது வயது பெரிசு வரை அனவருக்கும் படிக்கக் கிடைப்பது நமீதாவின் மார்பு பிதுங்கிய அட்டைப்படம் தாங்கிய வணிகப் பத்திரிகைகள் மட்டுமே. இதனால்தான் பிஞ்சில் பழுத்த சிறுசுகளும், விடலைத்தனமான பெரிசுகளும் இங்கே வாசகர்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர் தப்பித்தவறி சிறுபத்திரிகைகள் பக்கம் நகர்கிறார்கள். என்வே, இப்போதைய சூழலில் தமிழில் சிறுவர்களுக்கான எழுத்துக்கள் எழுதப்பட வேண்டும். பாடப்புத்தகங்களுடன் இலக்கியமும் சேர்ந்து படிக்கும் பழக்கம் அப்போதுதான் அவர்களுக்கு வரும். அந்தப் பழக்கம் அவர்கள் வளர, வளர தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். வெறும் பாடப்புத்தகங்களைக் கட்டிக் கொண்டு மாரடிக்கும் அவல நிலை அவர்களுக்கு நேராது. பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும் ஒரு புத்தக உலகம் இருப்பது அவர்களுக்குத் தெரிய வரும். அது அவர்களை சுய சிந்தனை உள்ள நல்ல குடிமகன்களாக மாற்றும். ஜெயந்தி சங்கருக்கு குழந்தைகளுக்குக் கதை சொல்லும் மொழி கைவந்திருக்கிறது. அவரே கூட தமிழில் ஒரு நல்ல சிறுவர் கதைத் தொகுப்பை எழுதித் தந்து ஒரு புதிய வாசலைத் திறந்து வைக்க முடியும்.
*****

1 comment:

  1. புத்தக விமர்சனம் மிகச் சிறப்பாக உள்ளது நண்பரே. ஞாயிற்றுக்கிழமை நாம் நேரில் பேசியதை உடனடியாகப் பதிவாக்கியதற்கு மிக்க நன்றி.

    கே.பாலமுருகன்

    ReplyDelete