Monday, December 14, 2009

on parody
எனது இடுகையை வாசித்து உடன் தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் செய்திருக்கும் அர்விந்த் செல்லைய்யா மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் என் நன்றிகள். நிற்க. ’பகடி’ பற்றி. வாழ்க்கையால் பாதிக்கப்படும் மனிதன் பதிலுக்கு வாழ்க்கையை பாதிக்க விரும்புகிறான். அவன் முன்னால் மூன்று சாத்தியங்கள் உள்ளன. ஒன்று புரட்சிக்காரன் ஆவது; இரண்டு துறவியாவது; மூன்று: கலஞன் ஆவது.இந்த மூன்றில் உணர்ச்சி வசப்படுபவர்கள் கலைஞர்கள் ஆகிறார்கள். மறறவர்கள் தங்கள் மன நிலைக்கேற்ப துறவியாகவோ புரட்சிக்காரனாகவோ மாறுகிறார்கள். இவர்களை இப்படி மாற்றுவது அதிகாரத்தின் உரையாடல் என்பது மிக முக்கியமானது. வாழ்க்கையால் பாதிக்கப்படுபவர்களில் இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள். அவர்கள் விளிம்பு நிலை மக்களே. இவர்கள் சிறப்புரிமை மறுக்கப்பட்டவர்கள். புறக்கணிப்பின் வலியை உணர்ந்தவர்கள். கறுப்பு நிற ஆப்பிரிக்க மக்கள், தலித்துகள் போன்ற பலரை நாம் விளிம்பு நிலை மக்களாகப் பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட மக்க்ளான கலைஞர்களும், பாதிக்கப்பட்ட மக்களான விளிம்பு நிலை மக்களும் ஒரே தட்டில் உள்ளவர்களே. அப்படி இருக்கையில் இவர்கள் இருவரது குரல்களும் தங்களுக்கு எதிரான அதிகாரத்தின் உரையாடலை நோக்கித்தான் இருக்க வேண்டுமே தவிர, தங்களுக்குள்ளேயே இருக்கக் கூடாது. அந்த எதிர் உரையாடலில் ஒன்று ‘பகடி’. சார்லி சாப்ளினின் பகடி அவர வாழ்ந்த காலத்து அதிகாரத்தின் உரையாடலுக்கு எதிர் உரையாடலாக இருந்தது. அமெரிக்கப் பின் நவீன எழுத்தாளரான ஜெர்ஸி கோஸின்ஸ்கியின்,Being there என்ற நாவல் அமெரிக்க அதிகாரத்தின் உரையாடலுக்கு எதிரான பகடியை அற்புதமாக நிகழ்த்திக் காட்டுகிறது. ஹாலிவுட் இயக்குனரான உடி ஆலனின் படங்களில் இடம் பெறும் அமெரிக்காவுக்கு எதிரான பகடிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. பகடி செய்வது கலைஞனின் உரிமை. அந்த பகடி அதிகாரத்தின் உரையாடலுக்கு எதிரான மாற்று உரையாடலை உருவாக்குவதாக இருக்க வேண்டும். உரிமை மறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, அவல வாழ்க்கை வாழ நேர்ந்த விளிம்பு நிலை மக்களைப் பகடி செய்வது அதிகாரத்தின் உரையாடலை வழி மொழிவதாகும். என்வே, இந்த நக்கலை எதிர் - நக்கல் எனலாம். எதிர் - நக்கல் ஏற்புடையதல்ல.

No comments:

Post a Comment