Tuesday, December 15, 2009

ஓர் ஆங்கிலேயரின் பின்காலனிய இந்திய மனச்சுமை
அந்தச் சிறைச்சாலையின் காம்பௌண்ட் சுவரை ஒட்டிய தரையில், ஒரு சவப்பெட்டியை இறக்குவதற்கு ஏற்ற வகையில், ஒரு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அதில் அவசர அவசரமாக ஒரு சவப்பெட்டி இறக்கப்பட்டது. சமயச்சடங்குகள் இல்லை; உறவினர்களின் கண்ணீர் இல்லை. சொல்லப்ப்போனால், சவப்பெட்டியில் அடக்கமாகியிருந்த அந்தச் சவத்தின் உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே தெரியாது. அந்தச் சவ அடக்கத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில சிறை அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். சவ அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தில் எவ்வித அடையாளச்சின்னங்களோ பொறிக்கப்படவில்லை. விரைவிலேயே அந்த இடத்தில் புல் வளர்க்கப்பட்டு அந்த இடம் சுற்றி இருந்த புல் தரையோடு தரையாக ஆக்கப்பட்டது. இப்போது அந்த இடத்தில் ஒரு சவம் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என்று யாராலும் யூகிக்கவே முடியாது..... இப்படி ஆரம்பீக்றது வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய, தி லாஸ்ட் மொகல் (The last Mohul) வரலாற்று நூல். இந்தியாவை ஆண்ட மொகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரான பகதூர் ஷாவுக்குத்தான் இந்த கதி நேர்ந்தது. தனது கடைசிக் காலத்தில் பிரிட்டிஷ்காரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, ராஜ துரோகககுற்றத்துக்காக பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கே தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு இறுதியாக சிறையிலேயே உயிர் துறந்த அவரது உடல்தான் இவ்விதம் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது. ஒரு நாயின் உடலைக் கூட நினைவுச்சின்னம் அமைத்து நினைவு கூரும் வெள்ளையர்கள் ஒரு மாபெரும் சக்கரவர்த்தியை இவ்விதம் அவமதித்தார்கள். ஒரு இந்தியன் இந்த நிகழ்ச்சியை எப்படிப் பார்ப்பானோ அப்ப்டிப் பார்த்து, ஒரு இந்திய மனநிலையில் இந்தக் காட்சியைப் பதிவு செய்கிறார் டேல்ரிம்பிள்.
ஸ்காட்லாந்தில் 1965ம் ஆண்டு பிறந்த இந்த மனிதர் பிரபல ஆங்கில எழுத்தாளரான வர்ஜீனியா உல்ஃபின் ஒன்று விட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. வறண்ட தன்மை கொண்டவை என்று கருதப்படும் வரலாற்றுப் புத்தகங்களை ஒரு புனைவுக்குரிய தன்மையோடு ரசிக்கும் விதமாக எழுதுபவர் டேல்ரிம்பிள். ரொலாண் பார்த் சொல்லும், ‘பிரதி தரும் இன்பம்’ இவரது பிரதிகளில் நிச்சயம் உண்டு. ஒரு இந்தியனை விட மிக அதிகமாக இந்தியாவைப் பற்றி அறிந்தவர்; இந்தியாவை நேசிப்பவர் என்று இவரைச் சொல்லலாம். இவர் இவரது நாட்டில் வாழ்ந்த காலங்களை விட இந்தியாவில் அலைந்து திரிந்த நாட்களே அதிகம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் டெல்லியிலும், ஹைதராபாத்திலும் நடந்த பல சுவாரஸ்யமான வரலாற்றுச் சம்பவங்களை இவரது பேனா மிக அழகாகப் பதிவு செய்து விடுகிறது. டெல்லியிலும், ஹைதராபாத்திலும் அந்தப்புரங்கள் எப்படி இருந்தன; அங்கு நிலவி இருந்த கடுமையான் கட்டுப்பாடுகளை மீறி எப்படி ஒரு நிஜாமின் மைத்துனி ஒரு பிரிட்டிஷ் அதிகாரியைக் காதலித்து ரகசியமாக உடலுறவு கொண்டு கர்ப்பமானாள் அதன் விளைவாக இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு எப்படி அதிர்ந்து போனது போன்ற விவரங்களைத் தனது ‘ஒயிட் மொஹல்ஸ்’ (White Mohuls) என்ற நூலில் ஆவணப்படுத்துகிறார். இவர் புத்தகங்களில் வரும் விபரங்கள் இது வரை யாரும் அறியாதவை.வரலாற்றின் பக்கங்களில் விடுபட்டுப்போனவை. ஒரு மாற்று வரலாற்றை உருவாக்குபவை. நான் ஹைதராபாத்துக்குப் பல முறை சென்றிருக்கிறேன். அங்குள்ள பேகம் கார்டனைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அது யாரோ ஒரு நிஜாம் காலத்து ராஜகுமாரியின் தோட்டம் என்று சர்வ சாதாரணமாகப் பார்த்து விட்டுக் கட்ந்து போயிருக்கிறேன். டேல்ரிம்பிளின் ஒயிட் மொஹல் என்ற நூலைப் படிக்கும் போது ஒரு புறக்கணிக்கப்பட்ட காதல் வரலாறு தெரிய வருகிறது. அந்த பேகத்தின் பெயர் கைரூன்னிஸா. பேரழகியான (அவளது படம் அட்டையில் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் அவள் பேரழகிதான்.) அவள் ஹைதராபாத் நிஜாமின் பிரதம மந்திரியின் மைத்துனி. ஜேம்ஸ் கிர்க்பேட்ரிக் என்ற பிரிட்டிஷ் அதிகாரியை அவள் எப்ப்டி காதல் வலையில் வீழ்த்தினாள்; அந்தக் காதல் இறுதியில் என்ன ஆனது என்பது போன்ற விவரங்கள் அதில் இருக்கின்றன. டேல்ரிம்பிளின் ‘சிடி ஆஃப் ஜின்ஸ்’, ‘தி ஆஜ் ஆஃப் காளி’ போன்ற பிற நூலகளும் வியப்பைத் தரும் தகவல்கள் கொண்டவையே. இவரது புத்தகங்கள் சென்ற நூற்றாண்டின் பாழ்பட்ட இந்திய வசீகரத்தை நினைத்து ஏங்குகின்றன. அவற்றில் டேல்ரிம்பிளின் பின் காலனிய மனச்சுமை தெரிகிறது. ஒரே நேரத்தில் ஐந்து, பத்து என்று தங்கள் புத்தகங்களைப் போட்டி போட்டு கொண்டு வெளியிடும் நமது தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லாத பின் காலனிய மனச்சுமை ஒரு ஆங்கில எழுத்தாளருக்கு இருப்பது ஒரு நகை முரண் என்றே சொல்லத்தோன்றுகிறது.
*****

1 comment:

  1. //ஒரே நேரத்தில் ஐந்து, பத்து என்று தங்கள் புத்தகங்களைப் போட்டி போட்டு கொண்டு வெளியிடும் நமது தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லாத பின் காலனிய மனச்சுமை ஒரு ஆங்கில எழுத்தாளருக்கு இருப்பது ஒரு நகை முரண் என்றே சொல்லத்தோன்றுகிறது//

    நம்ம ஆட்கள் அதை இழிமுரண் என்றோ அல்லது இளிமுரண் என்றோ சொல்வார்கள் போல.

    ReplyDelete