Thursday, February 4, 2010

ரோஜாவின் பெயர்

சமீப காலங்களில் மலேஷியாவில் சர்ச்சுகள் தாக்கப்பட்டு வருவது வேதனை தரும் சம்பவங்களாக இருக்கின்றன. ‘அல்லா’ என்ற சொல்லை முஸ்லீம் அல்லாதவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று கோலாலம்பூரில் உள்ள ஒரு கோர்ட் கருத்துத் தெரிவித்ததையொட்டி இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கோர்ட்டின் கருத்துப்படி ‘அல்லா’ என்ற சொல் முஸ்லீம்களுக்கு மட்டுமே உரியதாம்; அதை முஸ்லீம் அல்லாதார் யாரும் பயன்படுத்தக் கூடாதாம்.

அல்லா என்ற சொல் அல்-இலா என்ற அரபுச் சொல்லிலிருந்து உருவானது. இஸ்லாம் தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே அல்லா என்ற சொல் தோன்றி விட்டது. முகமது நபிகள் தோன்றுவதற்கு முன்னமே அல்லா என்ற சொல் புழக்கத்தில் இருந்தது என்பதற்கும், நபிகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த முஸ்லீம் அல்லாத மக்களால் அச்சொல் கடவுள் என்ற அர்த்தத்தில் பயன் படுத்தப்பட்டு வந்தது என்பதற்கும் திருக்குர்-ஆனில் ஆதாரம் இருக்கிறது. முகமது நபிகளின் வருகைக்கு முன்னர் மெக்காவில் பல சிறு தெய்வ வழிபாடுகள் இருந்ததன. அல்-மனாத், அல்-உஸ்ஸா, அல்-லாத் போன்ற பெண் தெய்வங்கள் மக்களால் வழிபடப்பட்டன. ஒவ்வொரு பழங்குடிக் குழுவும் ஒரு பெண் தெய்வத்தை வழிபட்டன. முகமது நபிகளின் இனமான குரைஷி இனம் அல்-உஸ்ஸாவை வழிபட்டது. இருந்தாலும் அந்தப் பழங்குடி மக்கள் இனத்தில் பெருவாரியான மக்களால் வழிபடப்பட்ட தெய்வம் மனாத் மட்டுமே. இந்தத் தெய்வங்கள் எல்லாம் கடவுளின், அதாவது, அல்லாவின் மகள்கள் என்றே அழைக்கப்பட்டனர் என்பது முக்கியமானது. ஒரு புதிய ஓரிறைக் கொள்கையை முன் வைத்து புதிய மதத்தை உருவாக்க விரும்பிய நபிகளுக்கு இந்தச் சிறு தெய்வங்கள் பிரச்சனையாக இருந்தன. ஒன்று இச்சிறு தெய்வங்களை ஒழிக்க வேண்டும்; அல்லது இவற்றை சுவீகரித்துக் கொண்டு தனது புதிய மதத்தை நிறுவ வேண்டும். இவ்விரண்டில் எது சாத்தியம்? இதுதான் நபிகளின் யோசனையாக இருந்தது. இறுதியில் சிறு தெய்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு முகமது நபியின் ஏக இறைமைக் கொள்கையான அல்லா முன் நிறுத்தப்பட்டது என்பது வரலாறு.

கடவுளை அல்லா என்று நபிகளுக்கு முந்தைய அரபுப் பழங்குடி மக்கள் மட்டும் அழைக்கவில்லை. போர்னியோவில் வாழும் கிறிஸ்தவர்களும் தங்கள் கிறிஸ்தவக் கடவுளை அல்லா என்றே அழைத்து வருகிறார்கள். அதுவும் பல நூற்றாண்டுக் காலமாக. அப்படி இருக்கையில் முஸ்லீம் அல்லாதார் அல்லா என்ற சொல்லை உபயோகிக்கக் கூடாது என்று சொல்வது அறிவியல்ரீதியாக சரியானது என்று படவில்லை. கடவுளை தமிழில் ‘இறைவன்’ என்றும், ஆங்கிலத்தில் ‘GOD’ என்றும், வடமொழியில், ‘ஈஷ்வர்’ என்றும் அழைப்பது போல் அரபு முதலான இஸ்லாமிய மொழிகளில் அல்லா என்று அழைக்கிறார்கள். அவ்வளவுதான். தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கும் போது அதையெல்லாம் விட்டு விட்டு இது போன்ற தேவையில்லாத பிரச்சனைகளில் ஈடுபாடு காட்டுவது இறுதியில் ஃபாசிஸத்தை நோக்கிய நகர்வில்தான் போய் முடியும். இலங்கையில் பண்டாரநாயகா ஆரம்பித்து வைத்த சிங்களப் பேரினவாதத்தால் இன்று வரை இலங்கை சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அந்த நிலைமைக்கு இப்படிப் பட்ட அடையாளச் சிக்கல்களை அங்கிருந்த அரசியல்வாதிகள் உருவாக்கியதுதான் காரணம். எனவே, அது போன்ற ஆபத்தை இத்தகைய கருத்துகள் உருவாக்க வாய்ப்பு இருக்கிறது. மலேஷியாவின் அண்டை நாடான சிங்கப்பூரில் இத்தகைய பிரச்சனைகளை யாரும் கிளப்புவதில்லை. இதனால்தான் அந்த நாடு மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலிருந்து விலகி முதல் உலக நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ரோஜாவின் பெயரை என்ன பெயர் சொல்லி அழைத்தால் என்ன?


பிரிட்னி ஸ்பியர்ஸின் தொப்புளை முன் வைத்து ஓர் ஆய்வு.

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் தொப்புளைப் பற்றிய தனது ‘ஆழ்ந்த அவதானிப்பை’ பிரபல போர்ச்சுகீஸிய எழுத்தாளரான பாவ்லோ கொயல்லோ சமீபத்தில் பதிவு செய்திருந்தார். இது என்னை வியப்பில் ஆழ்த்தியது. கொயல்லோ தனது ‘அல்கெமிஸ்ட்’, ‘தி பில்க்ரிமேஜ்’ போன்ற பல தத்துவார்த்தமான நாவல்களுக்குப் பெயர் பெற்றவர். சூஃபிஸமும், சித்தர் மரபும் அவரிடம் ஓர் புள்ளியில் சந்திப்பதை நாம் கண்டு கொள்ள முடியும். அத்தகைய சீரியஸான மனிதரிடமிருந்து பிரிட்னியின் தொப்புள் பற்றிய வியாக்யானத்தை நான் எதிர்பார்க்கவில்லை. (மனிதர் ரகசியமாக எம்.டி.வி. பார்ப்பார் போல)

‘பிரிட்னியின் ஒரு போஸ்டரைப் பார்த்தேன்; உடனே நான் சிந்தனை வயப்பட்டேன்’ என்று கிளர்ச்சியுடன் கூறும் கொயல்லோ, ‘பிரிட்னியின் படங்களைப் பல தடவை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இது தோன்றாமல் போய்விட்டதே’ என்று ஆதங்கப்படவும் செய்கிறார்.

சதா தொப்புளைக் காட்டிக் கொண்டு போஸ் கொடுக்கும் பிரிட்னி தன்னுள் பல சிந்தனைகளை எழுப்பி விட்டாள் என்கிறார் அவர்.

பெண்கள் தங்களின் தொப்புளை ஆண்களுக்குக் காட்டுவதில் திவிர மனப்பீடிப்பு நோய்க்கூறு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் கொயல்லோ. ‘வட்டமான ஆழமான அந்த வடு, காலங்காலமாக பல தீவிரமான தளங்களில் இயங்கிக் கொண்டு இருக்கிறது.உலகின் பல மொழிகளில் தன் முனைப்புச்சிந்தனை கொண்டவனை, ‘அவன் தன் தொப்புளைப் பார்ப்பவன்’ என்று குறிப்பிடுவார்களாம். புராதன கலாச்சாரங்களில் புனித ஸ்தலங்கள் யாவும் தொப்புள் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன. பண்டைய கிரீஸின் அப்போலோ கோவிலில் உள்ள ஒரு சலவைக்கல் பாறை ‘தொப்புள்’ என்று அழைக்கப்பட்டது. காரணம் அது பூமியின் மையம் என்று கருதப்பட்டது. அதே போல் ஜோர்டானில் உள்ள பெட்ராவில் இருக்கும் ஓர் இடம் தொப்புள் என்று அழைக்கப்படுகிறது. அந்த இடம் பிரபஞ்சத்தின் மையம் என்று கருதப்படுகிறது.

ஜெருசலம் கூட ஒரு காலத்தில் பூமியின் தொப்புளாக, அதாவது, மையமாகக் கருதப்பட்டது. இங்கிலாந்துக்கு அருகே இருக்கும் ஈஸ்டர் தீவுகள் கூட அவ்விதமே கருதப்பட்டன.

பண்டைய மெக்ஸிகோவில் வாழ்ந்த பழங்குடி மக்கள், பிரபஞ்சத்திலிருந்து தோன்றும் முட்டை வடிவ ஒளிப்புழையிலிருந்து மனிதகுலம் தோன்றியதாக நம்பி இருக்கிறார்கள், அந்த ஒளிப்புழை பிரபஞ்சத்தின் தொப்புள்.

இந்து புராணத்தில் தொப்புள் என்பது மறு பிறவியின் அடையாளம். விஷ்ணுவின் தொப்புளில் இருந்துதான் ஜனன மரணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது ஐதீகம். எகிப்தில் உள்ள தொப்புள் நாட்டியக்காரிகள்(belly dancers) தங்கள் தொப்புளையே தங்கள் நாட்டியத்தின் மையமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ரீதியில் தனது சிந்தனையை ஓட விட்டு, தனது பல முக்கியமான கண்டுபிடிப்புகளைக் கண்டடைய பிரிட்னி தன் தொப்புளைக் காட்டிக் கொண்டு நிற்பது உதவுகிறது என்று சொல்கிறார் கொயல்லோ.