Friday, July 30, 2010

பின் காலனிய சிந்தனைகள்<>

பின் காலனியம் என்பது பின் நவீன சொல்லாடலாகும். மேற்கத்திய நாடுகளில் நிலவும் நிலவரம் பின் நவீன நிலவரம் என்றால், காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகளில் நிலவும் நிலவரம் பின் காலனிய நிலவரம் ஆகும். காலனி ஆதிக்கத்தின் போது காலனியாக உள்ள நாட்டின் இனம், மொழி, கலாசாரம் ஆகியவை கலப்புக்குள்ளாகின்றன. காலனி நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் நாடு தனது மொழி, கலாசாரம் ஆகியவற்றை முத்லீடு செய்கிறது. அதன் மூலம் அது தனது இருப்பை உறுதி செய்து கொள்கிறது.

இந்தியாவில் வெள்ளையர்கள் வரும் முன் பதினெட்டு வகையான தானியங்கள் தமிழகத்தில் பயிரிடப்பட்டு வந்தன. அந்தப் பதினெட்டு வகையான தானியங்களிலும், சக்தி குறைந்தது அரிசி மட்டுமே. தற்போது அரிசி தவிர்த்து மற்ற தானியங்கள் காணாமல் போயின. அதற்குக் காரணம் யார்? காலனி நாட்டில் இருக்கும் மக்கள் சக்தி குறைந்த உணவான அரிசி மட்டுமே தின்று பலவீனர்களாக இருந்தால் அவர்களை அடக்கி ஆள்வது சுலபம் என்பதால் ஆதிக்க ஆட்சியாளர்கள் தமிழகத்தில் அரிசி உற்பத்திக்கு மட்டும் முதலிடம் கொடுத்தார்கள். அதே போல் ஒரு காலத்தில் வட இந்தியாவில் கறுப்பு நிற அரிசி இருந்ததாகவும் அது உண்பதற்கு அதி அற்புதமான சுவை கொண்டது என்றும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்த யாத்ரீகர்களின் பயணக்குறிப்புகள் மூலம் அறிகிறோம். நாளந்தா பல்கலைக்கழகத்தில் அந்த கறுப்பு அரிசி உணவாக உட்கொள்ளப்பட்டது அது மிகுந்த சத்து மிக்க உணவு என்றும் சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றன. அந்த கறுப்பு அரிசி இப்போது பௌத்தம் புலம் பெயர்ந்த தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் அது காணக் கிடைக்கவில்லை. இதெல்லாம் காலனியாக இருக்கும் நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள். விபத்துக்குப் பின் விபத்தில் ஏற்பட்ட காயம் வடுவாக மாறித் தங்கி விடுவது போல், அன்னிய நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட போதும், ஏற்கெனெவே ஏற்பட்ட் காயங்கள் வடுக்களாகத் த்ங்கிவிடுகின்றன.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டன் உலகின் பெரும்பாகத்தை காலனியாக வைத்திருந்தது. அதனால் உலகில் நேர்ந்த குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடாக இல்லை. அறுபதுகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தம், அதன் பின் இந்தியா பாகிஸ்தான் இடையிலே நிகழ்ந்த யுத்தங்கள் இவை எல்லாவற்றுக்கும் காரணம் பிரிட்டிஷ் அரசின் தவறான எல்லைப் பிரிப்புகளே காரணம். இப்படி உலகெங்கும் பின் காலனியம் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது. எட்வர்ட் சேத்தின் புகழ் பெற்ற நூலான ‘ஓரியண்டலிசம்’ தான் பின் காலனியம் என்ற சொல்லாடலை புழக்கத்துக்குக் கொண்டு வந்தது. சேத் ஃபிரெஞ்சு சிந்தனையாளரான மிஷல் ஃபூக்கோவின் சீடர். அவரைத்தொடர்ந்து, ஹோமி பாபா, காயத்ரி ஸ்பிவாக் பொன்றோர் பின் காலனிய கருத்தியலை வளர்த்தெடுத்தனர்.


ஃபூக்கோவின் தடம் பற்றி நடந்த சேத், ‘அதிகாரமும் அறிவும் பிரிக்க முடியாதவை’ என்றார். மேலும் அவர், ‘கிழக்கைப் பற்றித் தான் கொண்ட அறிவின் மீதான மேற்கின் ஆதிபத்திய உரிமை, கிழக்கின் மீதான மேற்கின் அதிகாரம் செலுத்துவதற்கான உரிமையாக மாறியது’ என்று எழுதினார். இன்னொரு முக்கியமான பின் காலனியவாதி ஃபிரான்ஸ் ஃபனோன். அல்ஜீரியாவில் பிறந்த இவர் ஓர் உளவியலாளர். அல்ஜீரியா ஃப்ரான்சின் காலனி நாடு. காலனி நாட்டில் வாழ நேரும் பிரஜைகள் எந்த விதமான உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள் என்று ஆராய்ந்தவர் இவர். ஃப்னோன் எழுதிய முதல் நூல், ‘கறுத்த தோலும், வெள்ளை முகமூடிகளும்.’ இந்த நூல் காலனி ஆதிக்கம் பிரஜைகளை எவ்விதம் அடிமைத்தனத்துக்கு உள்ளாக்குகிறது என்று ஆய்கிறது.

பின் காலனிய இலக்கிய வகைமைகள் எப்படி இருக்க வேண்டும்? அவை, ‘பின்னோக்கி எழுதுதல்’, ‘மறுபடியும் எழுதுதல்’, மற்றும் ‘மறு வாசிப்பு’ பொன்ற தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆப்பிரிக்க எழுத்தாளரான, சினுவா ஆச்சிபெ, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான, இஸ்பெல் அலெண்டெ, மார்க்வெஸ், இந்திய வம்சாவளி எழுத்தாளர்களான வி.எஸ். நைபால், சல்மான் ருஷ்டி ஆகியோரின் எழுத்துகள் பின் காலனிய எழுத்துகளாக அறியப்படுகின்றன.

தமிழில்?

இந்தியாவில் தலித்திய எழுத்துகள் பின் காலனிய எழுத்துகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. தமிழிலும் தலித் எழுத்துகள்தான் பின் காலனிய எழுத்துகளாக அடையாளப் படுத்தப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. இமையத்தின் நாவல்கள், ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம், சோ. தர்மனின் கூகை, மாலதி மைத்ரி, சுகிர்தராணி ஆகியோரின் கவிதைகள் போன்றவை பின் காலனிய எழுத்துகள் என்லாம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ரவிக்குமார் எழுப்பிய ஒரு கேள்வி நினைவுக்கு வருகிறது. ’உலகம் முழுதும் காலனி ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள்தான் பின் காலனியத்தைக் கையில் எடுத்தார்கள். இந்தியாவில் மட்டும் காலனி ஆட்சியில் நேரடியாகப் பாதிக்கப்படாமல் சௌகர்யமாக இருந்த ஒரு சமூகம் அதைத் தன் கையில் எடுத்திருக்கிறது’ என்ற ரீதியில் அவர் எழுப்பி இருக்கும் கேள்வி முக்கியமானது.

,,..

1 comment: