Saturday, September 4, 2010

சில பிராகிருதக் கவிதைகள்

இந்திய மொழிகளை ஆய்வாளர்கள் இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். ஒன்று: சம்ஸ்கிருதம் மற்றும் அதன் கிளை மொழிகள்.இரண்டு: பிராகிருதம் மற்றும் அதன் அதன் கிளை மொழிகள். சம்ஸ்கிருதம் என்பதற்கு, ‘உருவாக்கப்பட்ட’, ‘மெருகூட்டப்பட்ட’ மொழி என்பது பொருள். பிராகிருதம் என்பதற்கு ‘இயற்கையான’, ‘பொதுவான’ என்பது பொருள்.

ஒரு புறம் சம்ஸ்கிருதம் வேத மொழியாக வைதீகர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட போது, அதே காலக்கட்டத்தில் பிராகிருதமும் செழித்து வளர்ந்தது. சம்ஸ்கிருதம் வைதீகர்களின் மொழி என்றால், பிராகிருதம் அவைதீகர்களின் மொழியாக இருந்தது. மகாவீரரும், புத்தரும் தங்கள் போதனைகளை பிராகிருதத்தில்தான் போதித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தர் சம்ஸ்கிருதத்துக்கு எதிரான போக்கைக் கொண்டிருந்தார்.குப்தப் பேரரசின் ஆட்சிமொழியாக பிராகிருதம்தான் இருந்தது. வட இந்திய மொழிகள் அனைத்துக்கும் சம்ஸ்கிருதம்தான் தாய் என்பது உண்மை அல்ல. மஹாராஷ்ட்ரி, சௌரசேனி, ம்கதி, பைசாசி, அப்பிரம்ஸா ஆகிய வடமொழிகள் பிராகிருதத்தின் கிளை மொழிகள். பாலி மொழியும் பிராகிருதத்தின் கிளையான அர்த்த மகதியின் இன்னொரு வடிவமே.

துரதிருஷ்டவசமாக வைதீகர்களின் மேலாண்மையினால், சம்ஸ்கிருதம் மையப்படுத்தப்பட்டு, பிராகிருதம் மற்றமையாக்கப்பட்டது. பிராகிருத இலக்கியங்கள் விளிம்பு நிலைக்குத்தள்ளப்பட்டு கவனிப்பாரின்றி, முற்றாக அழிந்து போயின. ஆயினும் ஒரு சில பக்கங்கள் மிஞ்சி இருக்கின்றன என்பது ஆறுதல் தரும் செய்தி. கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் பிராகிருதச் செய்யுள்களை ஹாலா என்னும் சாதவாகன மன்னன் தொகுத்திருக்கிறான். இக்கவிதைகளை மகரன் தாசன், அமரராஜா, குமரிலா, ஸ்ரீராஜா ஆகியவர்கள் எழுதியிருக்கிறார்கள். இக்குறுங்கவிதைகளை வாசிக்கும் போது, நமது சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல்களை வாசிக்கும் உணர்வு ஏற்படுகிறது.

செய்யுள் எண்: 11
அவள் சினத்தில் இருந்தாள்
அவன் தன் மனைவியின்
பாதம் தொட்டு அவளது கோபத்தைத்
தணிக்க முயல்கையில்,
அவனது குழந்தை
அவன் முதுகில் ஏறித் தன் தாயின்
முகத்தை எட்டிப் பார்த்தது; புன்னகைத்தது.
உடனே சினத்தில் இருந்த மனைவி
சிரித்து விட்டாள்.

செய்யுள் எண்: 23

தீவிரமாக உடலுறவு கொள்ளும் சமயத்தில்
அவள் நூறு கட்டளைகளைப்
பிறப்பிப்பாள்
அவள் கன்னங்கள் இன்பத்தில் திளைத்து
சிவந்து மலரும்
விடிந்த பின்போ – அவள் முகம்
அதிருப்தியில் சூம்பிக் கிடக்கும்.

செய்யுள் எண்: 48

கடவுளே
என் காதலனுக்கு இன்னும்
பல பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்து
அப்போதுதான்
என்னுடைய அருமை பெருமைகள்
அவனுக்குத் தெரியும்.

செய்யுள் எண்: 55

உடலுறவு முடிந்த பின்னரும்
அந்த இளம் மனைவிக்கு அந்த
விஷயம் தெரியவே இல்லை
பட படக்கும் இதயத்தோடு
இன்னமும் செய்வதற்கு என்னமோ
இருக்கிறது என்று ஆவலுடன்
எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறாள் அவள்.

செய்யுள் எண்: 60

பெண்ணே
நடையின் வேகத்தை மட்டுப்படுத்து
நீ உன் ஆடையை – பாதி உடல்
வெளித்தெரியும்படி, தூக்கிப் பிடித்தபடி
நடக்கிறாய்.
உன் இடுப்பு உனது மார்பகங்களின்
எடை தாங்காமல் தவிப்பதை நீ அறிய மாட்டாயா?
உனது வேகமான நடையால், உன் மார்பகங்களின்
எடை தாங்காமல் உன் இடை ஒடிந்து விழக்கூடும்.

செய்யுள் எண்: 62

பிச்சை எடுக்கும் இளைஞன்
பிச்சை இடும் யுவதியின் தொப்புளை
வெறித்தபடி இருக்கிறான்.
பிச்சை இடும் யுவதியோ
பிச்சை எடுக்கும் இளைஞனின்
சந்திரனைப் போன்ற வதனத்தையே
வெறித்தபடி இருக்கிறாள்.
காகங்களோ அவள் கையில் இருக்கும்
உணவைத் தின்று தீர்க்கின்றன.

செய்யுள் எண்: 70

புயல், கூரையின் வைக்கோலைப்
பிய்த்து எறிந்து விட்டது
அந்த இடத்தில் துளை ஏற்பட்டு
மழை சொட்டுகிறது; சுவர் நனைகிறது
கணவன் வரும் நாளை சுவரில்
எழுதி வைத்து விட்டுக் காத்திருக்கும்
அந்த வீட்டுப் பெண் – கணவன் வ்ரும் நாளை
மழை நீர் அழித்து விடாதிருக்கும் பொருட்டு
தனது உள்ளங்கையால் பொத்துகிறாள்.

செய்யுள் எண்: 81

காதல் மறைகிறது
காதலர்கள் வெகுகாலம் ஒருவரை ஒருவர்
பார்க்காதிருக்கும் போது
காதல் மறைகிறது
காதலர்கள் அடிக்கடி ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்ளும் போது
காதல் மறைகிறது
கூட இருந்து குழி பறிக்கும் வதந்தி
பரப்புபவர்களின் செய்கையால்
காதல் மறைகிறது
ஒரு காரணமும் இல்லாமலும் கூட.




செய்யுள் எண்: 100

சொல்லேன்
தவறான நேரத்தில்
தவறான இடத்தில்
முக்கியமான காரியத்துக்காக
மன்றாடிக் கொண்டிருக்கும் போது
இடையீடு வந்தால்
யாருக்குத்தான் வெறுப்பு வராது?
என்னதான் பெற்றெடுத்த அன்னையாகவே
இருந்தாலும்,
தான் கள்ளக்காதலில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கும் போது
வீறிட்டு அலறும் தன் குழந்தையை
சபிக்கவே செய்வாள்.

(மேற்கண்ட செய்யுள்களை சாகித்ய அகதமி வெளி
யிட்டுள்ள Ancient Indian Literature- An anthology Vol two
என்ற நூலிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்)

மேற்கண்ட செய்யுள்கள் எழுதப் பட்ட காலத்தைத் துல்லியமாகச் சொல்ல் முடியாது. இவையும் சங்க இலக்கியம் போலவே பல் வேறு காலங்களில் எழுதப்பட்டு ஒரு குறிபிட்ட காலத்தில் தொகுக்கப்பட்டவையே. வைதீகம் இந்த மொழியைப் புறக்கணித்தது. எனினும் புத்தர் தனது போதனைகள் இந்த மொழியில் வெளியிடுவதையே விரும்பினார். இன்றைக்கு சம்ஸ்கிருதமு சரி பிராகிருதமும் சரி இரண்டுமே வழக்கொழிந்து விட்டன. சம்ஸ்கிருதம் வைதீக இலக்கியங்களாலும், பிராகிருதம் புத்தமத இலக்கியங்களாலும் குற்றுயிரும் குலை உயிருமாக முற்றிலும் சாகாமல் துடித்துக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் ஆதிக்க சக்திகளால் காப்பாற்றப்பட்ட மொழியும், புறக்கணிக்கப்பட்ட மொழியும் ஒரே கதிக்கு ஆளாகி இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

<> <> <> <> <>

1 comment:

  1. சமஸ்கிருதத்தின் பேச்சு வழக்கே பிராகிருதம்.பிராகிருத சொற்களில் சமஸ்கிருத சொற்களின் வேர்கள் இருப்பதைக் காணலாம்.சமஸ்கிருத மூலம் இல்லாத பிராகிருத வார்த்தைகளை நீங்கள் பட்டியலிட்டு காட்டினால் ,சமஸ்கிருதமும்
    பிராகிருதமும் வேறு என்ற உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    எனது மின்னஞ்சல் முகவரி bala_p37@yahoo.in

    ReplyDelete