Sunday, November 29, 2009

ponmalai

கவிதையில் நவீனத்துவமும், பின் நவீனத்துவமும்:
‘பொன்மாலைப் பூக்கள்’ கவிதைத்தொகுப்பை முன் வைத்து.

எம்.ஜி. சுரேஷ்

கவிதையில் நவீனத்துவமும், பின் நவீனத்துவமும் என்ற விவாதத்தைத் தொடங்கும் முன் முதலில் கவிதை என்றால் என்ன என்பதைத் தீர்மானித்துக் கொள்வது நல்லது. ஏனெனில், இன்றைக்கு அதிகம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கலை வடிவங்களில் கவிதை முதல் இடம் வகிக்கிறது. ஓர் அஞ்சலட்டை கையில் கிடைத்தால் போதும் ஒரு கவிதை தயாராகிவிடும். போகிற போக்கில் தபால் பெட்டியில் போட்டுவிட்டால் ஏதாவது ஒரு வாரமலரில் பிரசுரமாகிவிடும். அப்புறம் என்ன? அந்த ஆசாமி தன் பெயருக்கு முன்னால் கவிஞர் என்ற அடைமொழியைப் போட்டுக்கொண்டு அனைவரையும் பயமுறுத்துவார். இதனால் நவீன கவிதை இலக்கியம் கண்டதையும் ஏற்றுக் கொள்ளும் குப்பைத்தொட்டி போலாகிவிட்டது. அப்படியானால் கவிதை என்றால் என்ன?

‘எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு’

என்பது திருக்குறள். ‘எக்கவிதை யார் யார் வாய்க் கேட்பினும் அக்கவிதையுள் மெய்க்கவிதை காண்பதறிவு” என்பது புதுக்குரல். குறள் அல்ல குரல். உலகப்புகழ் பெற்ற நவீன கவிஞர் ஆர்க்கிபால்ட் மக்லீஷ், ‘கவிதை என்பது தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டியதில்லை: அப்படி இருந்தாலே போதும்’ என்கிறார். இன்னொரு கவிஞரான பாரதி, ’கேட்டவன் உள்ளத்தில் கவிதை உணர்வைத் தட்டி எழுப்புவது சிறந்த கவிதை’ என்று சொன்னார்.

அப்படியானால் எது கவிதை?

இப்போது கவிதை என்று சொல்லப்படும் இரண்டு பிரதிகளைப் பார்ப்போம். இரண்டையும் எழுதியவர் ஒருவ்ரே.

’சோற்றுக்கலைகின்ற நாயைப் பிடித்ததை
சொர்க்கத்தில் வைத்தாலும் - அது
நாற்ற மலந்தின்னப் போகும் என்னும் கதை
நாமறிவோம் நெஞ்சே - ந்ன்னெஞ்சே
நாமறிவோம் நெஞ்சே’

இதில் எதுகை இருக்கிறது; மோனை இருக்கிறது; யாப்பிலக்கணப்படி அமைந்திருக்கிறது. எல்லாம் இருக்கிறது. கவிதையைத்தவிர. இந்தப் பிரதி என்ன சொல்கிறது? ‘நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தால் அது ந்ரகல் தின்ன நடுத்தெருவுக்குத்தான் ஓடும்’ என்ற பழமொழியை வழி மொழிகிறது. அவ்வளவுதான். அது ஒரு நீதி நெறி. கவிதை வேறு; நீதி சொல்வது வேறு. இதே கவிஞர் இன்னொரு பிரதியை எழுதி இருக்கிறார். அது

‘நதியில் விளையாடி,கொடியில் தலை சீவி, வளர்ந்த இளந்தென்றலே’

இது ஒரு புகழ் பெற்ற திரைப்படப் பாடலின் ஒரு வரி. இதை கவிதை என்று சொல்லலாம். இந்தக் கவிதையில் சங்ககாலம் தொட்டு இயங்கி வந்திருக்கும் தமிழ் மரபு இருக்கிறது. உவமை, உருவகம் இருக்கிறது. இந்த இர்ண்டையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். ஆக, ஒரே கவிஞர் எழுதும் வரிகளில் ஒன்று கவிதையாக இருக்கிறது. இன்னொர்ன்று கவிதையாக இல்லாமல் இருக்கிறது. இது ஒன்றே கவிதையின் பிடிபடாத தன்மையை விளக்கும். கவிதை என்பது உற்பத்தி செய்யப் படுவதல்ல; தானே உதிப்பது.

ரிக் வேதத்தில் ‘தண்ணீரைச் சிறைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்’ என்று ஒரு வரி வருகிறது. அது கவிதை. நதியின் குறுக்கே அணை கட்டுவதை நீரைக் கைது செய்து சிறையில் அடைப்பதாக ரிக் வேதக் கவிஞன் உருவகப் படுத்தி இருக்கிறான். அதே சமயம் அதே ரிக் வேதத்தில் நிறைய பிரார்த்தனை கோஷங்கள் மலிந்திருக்கின்றன. அவற்றில் பல கவிதை என்று தேறாது. ஆக, கண்ணை மூடிக்கொண்டு ஒரு புனைவுப் பிரதியில் எங்கு தொட்டாலும் அங்கே கவிதை இருக்கும். அல்லது இல்லாமலும் இருக்கும். அறிவு தர்க்கம் சார்ந்தது. கவிதை உணர்வு சார்ந்தது. த்ர்க்கம் கவிதையைக் கொன்று விடும். உணர்வு கவிதையாக மிளிரும்.

நல்லது. கவிதை என்றால் என்ன என்பதைப் பார்த்தோம். இப்போது நவீன கவிதை என்பது பற்றிப் பார்ப்போம்.

உலகம் முழுவதுமே ஆதியில் செய்யுள்கள்தான் ஆட்சி செய்தன. பண்டைய கிரேக்கத்தில் ஹோமர் இயற்றிய ஒடிஸியாக இருந்தாலும் சரி, பண்டைய சுமேரியாவில் இயற்றப் பட்ட கில்காமேஷ் இதிகாசமாக இருந்தாலும் சரி, பண்டைய இந்திய வேதங்கள், தமிழ் நாட்டைச் சேர்ந்த சங்க இலக்கியங்கள் யாவும் செய்யுள்களே. இவை காலந்தோறும் மாறி வந்திருக்கின்றன. ச்ங்க காலச் செய்யுள்களிலிருந்து திருத்தக்கதேவரின் செய்யுள் மாறுபடுகிறது. திருத்தக்கத்தேவரின் செய்யுள்களிலிருந்து பாரதி, பாரதி தாசன் போன்றொரின் செய்யுள்கள் மாறுபடுகின்றன.இவை யாவும் பொதுவாக மரபுக் கவிதைகள் என்று அறியப்படுகின்றன. பாரதி, பாரதிதாசன் போன்றோரின் கவிதை மரபுக்குப் பின்னர் வந்த கவிதைகள் சுதந்திரமான கவிதைகளாக எழுதப்பட்டன. இவர்கள் கவிதையை இலக்கணம் என்ற தளையிலிருந்து விடுதலை செய்தார்கள். அது அத்தனை சுலபமாக நிக்ழ்ந்து விடவில்லை. நிலப்பிரபுத்துவ சமூகம் இருந்த வரை கவிதைப் பெண் இலக்கணம் என்ற அணிகலன்களை அணிந்திருந்தாள். தொழிற்புரட்சிக்குப் பின் தொழிற்சாலைகள் தோன்றின. அதைத் தொடர்ந்து நகரம் தோன்றியது. நிலப்பிரபுத்துவம் மரணப்படுக்கையில் வீழ்ந்தது. கிராம மனிதன் நகர மனிதனானான். நகரம் அவனுக்குப்புதிய பிரச்சனைகளை உற்பத்தி செய்தது. அடையாளச் சிக்கல்கள் தோன்றின. நிலப்பிரபுத்துவத்தின் ‘நாம், என்ற ‘கூட்டு மனம்’ தகர்ந்து, நகரத்தின் ‘நான்’ என்ற தனிமனம் உருவானது. நவீன மனம் உருவானதன் விளைவாகவே நவீனத்துவக் கவிதைகள் தோற்றம் கொண்டன.

முதலில் இந்த நிலவரம் ஐரோப்பாவில் தோன்றியது. அங்கே மரபுக்கவிதைகளுக்கு எதிராக முதலில் எதிர் கவிதை (anti-poetry) தோன்றியது. ஃஃப்ரான்ஸில் ஆந்திரே பிரதானின் தலைமைல்யில் சர்ரியலிஸ்டுகள் அதை ஆரம்பித்து வைத்தார்கள். கவிதைக்குரிய எல்லாவற்றையும் மீறுவது எதிர்-கவிதை எனப்பட்டது. ட்ரிஸ்டன் ட்ஸாரா, கில்லாம் அப்போலினேர் போன்ற சர்ரியலிஸ்டுகள் எதிர்-கவிதை எழுதினார்கள். ஒவ்வொரு சொல்லுமே கவிதைதான்; சொற்களை இணைத்துத்தான் கவிதை உருவாக வேண்டும் என்பதில்லை என்பது அவர்கள் வாதம். அதன் படி அவர்கள் கவிதைகள் எழுதப்பட்டன. அத்தகைய எதிர்-கவிதைகள் தமிழிலும் கூட ஆங்காங்கே ஒருசில எழுதப்பட்டன. தமிழில் பிரம்மராஜன் இதை முயற்சி செய்திருகிறார். கணையாழி இதழில் ஒரு கவிதை பிரசுரமானது. அதை எதிர் கவிதை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். நீ/பூ/வா/தா/சீ/போ. இதிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் சர்ரியலிஸ்ம் சொல்வது போல் ஒரு வாக்கியமாக நீளக்கூடிய தன்மையுடன் இருக்கிறது. நீ என்பது ஒரு பெண்; அவளை பூ என்று வர்ணிக்கிறான் கவிஞன். பின்னர் அவளை வா என்று அழைக்கிறான். அவள் வந்தாளா இல்லையா என்று தெரியவில்லை. சீ போ என்று ஒதுக்குகிறான் என்பதாக இதைப் பொருள் கொள்ளலாம். எது எப்ப்டியோ இந்த எதிர்-கவிதை இயக்கம் பெரிதாக வளரவில்லை. அதற்குள் புதுக்கவிதை இயக்கம் தோன்றி மள மள வென்று வளர்ந்து செழித்துவிட்டது. ஆங்கிலத்தில் வால்ட் விட்மன் இயற்றிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற வசன கவிதைத் தொகுப்புக்கு நோபல் பரிசு கிடைத்த போதுதான் புதுக்கவிதைக்கு மரியாதை வந்தது. விட்மனைப் பின்பற்றி உலகம் முழுதும் பலர் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தார்கள்.
இந்தியாவில் ரவீந்திரனாத் தாகூர் வசன கவிதையைத் தொடங்கி வைத்தார். அவர் சொன்னார்: ‘கவிதைப் பெண்ணே, செய்யுள் இலக்கணம் என்னும் அணிகலன்களைக் கழற்றி வைத்து விட்டு வா; அவற்றின் ஓசையில் உன் குரல் என் காதில் தெளிவாக விழவில்லை’ தான் இலக்கணம் மீறிய கவிதை எழுதுவதற்கு தாகூர் சொல்லும் சமாதானம் இது.

தமிழில் புதுக்கவிதையை ஆரம்பித்து வைத்தவர்களாக சி.சு.செல்லப்பா, க.நா.சு. போன்றோரைக் குறிப்பிடலாம். பின் தொடர்ந்து வந்தவர்களாக ஞானக்கூத்தன், பிரமீள்,சி.மணி போன்ற பலரைக் குறிப்பிடலாம். இவர்கள் அனைவரும் இலக்கணம் மீறிய கவிதைகளை எழுதினார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் இவர்கள் கவிதைகளில் மரபுக்கவிதையில் காணப்படும் உவமை, உருவகம், படிம உத்திகள் இருக்கவே செய்தன.

காற்றின் தீராத பக்கங்களில்
பறவையின் சரிதத்தை எழுதிச் செல்கிற்து
அந்த ஒற்றை இறகு

துருப்பிடித்த இரும்புக்கோடுகளினூடே
சிதறும் பயனற்ற உப்பு நீர்ப்பாறைகள்

என்றெல்லாம படிமங்களால் தன் கவிதையை நிரப்புவார் பிரமீள். ஞானக்கூத்தனோ வேலையை ‘காதைப் பிடித்துத் திருகி இழுத்துப்போகும் பூதமாக’ உருவகிப்பார். இவை யாவும் நவீன கவிதைகளே. இது போன்ற கவிதைகள் ஐரோப்பாவிலும் ஏராளமாக எழுதப்பட்டன. இது போன்ற கவிதைகளைப் படித்து அலுத்துப் போன ஜெர்மானிய கவிஞரான பெர்டோல்ட் ப்ரெக்ட் கவிதையில் ஒரு புதிய சிந்தனையை முன் வைத்தார். அந்த சிந்தனை, ‘மொழியைக் கழுவுதல்’ (Washing the language) என்பதாகும். அதாவது கவிதையின் மொழியிலிருந்து அதன் அலங்காரச்சொற்களையும், உருவகம், படிமம போன்ற தன்மைகளையும் நீக்க வேண்டும். இது போல் மொழியைக் கழுவிய கவிதை ஒன்றைப் பார்ப்போம். இது ஒரு ஜெர்மன் கவிதை. கவிஞரின் பெயர் ஹான்ஸ் மாக்னஸ்.

இங்கு இப்போது இந்த இடத்தை/நான் பார்க்கிறேன்/இது ஒரு சுதந்திரமான் இடம்/சொல்லப்போனால் இது ஒரு நிழல்/மன்னிக்கவேண்டும்/இந்த நிழல் விற்பனைக்கல்ல. இந்தக் கவிதை நவீன உலகில் எல்லாமே பண்டமாகிவிட்டது. கொஞ்சம் ஏமாந்தால் மனிதன் நிழலைக் கூட விற்று விடுவான் என்று கிண்டல் செய்கிற்து.
இன்றைக்குத் தமிழில் எழுதப்படும் கவிதைகளில் அனேகமாக எதுவுமே ‘மொழியைக் கழுவும் செயலைச்’ செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் எல்லா நவீன கவிதைகளுமே உவமை, படிமம், உருவகம் போன்ற தன்மைகளைக் கட்டிக்கொண்டு அழுகின்றன. இச்சூழலில் காலெடுத்து வைத்திருக்கும் பின் நவீனத்துவக்கவிதையின் நிலைமையை என்னவென்று சொல்வது.

'மொழியைக் கழுவினால் மட்டும் போதுமா?; அதில் இயங்கிக் கொண்டிருக்கும் அர்த்தத்தை என்ன செய்வது? என்பது பின் நவீனம் எழுப்பும் முக்கியமான கேள்வியாகும்.சொல்லும் அதற்கான அர்த்தமும் இணைபிரியாத இரட்டைக் குழந்தகள் அல்ல. ஏனெனில், ஒரு சொல்லுக்கு ஒற்றை அர்த்தம் என்று எதுவும் இல்லை.இதில் எந்த மொழிக்கும் விலக்கு இல்லை. தமிழில் படி என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருகின்றன. படிப்பது, படிக்கட்டு, அளக்கும் படி, படிப்படியாக, படிதல், படிந்து போதல் என்று அதற்கான அர்த்தம் நீண்டு கொண்டே போகிறது. அதே போல் ஆங்கிலத்தில் பார் என்று சொன்னால், மது அருந்தும் விடுதி, சர்க்கஸில் பார் விளையாட்டு ஆடுதல்,வழக்கறிஞர்கள் ஒன்று கூடும் பார் கௌன்சில் என்று பல அர்த்தங்கள் வருகின்றன. இந்தியில் காதல் என்பதற்கு ப்ரேம், ப்யார், மொஹபத், இஷ்க், என்று பல அர்த்தங்கள் உள்ளன. சொற்களுக்கும் அர்த்தத்துக்கும் இடையே ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுவதை பின் நவீனத்துவம் சுட்டிக் காட்டுகிறது. நேரான இயல்பான மொழியில் சொல்லும் சொற்களுக்கே பல அர்த்தங்கள் கற்பிக்கப்டும் போது, ஏற்கெனவே அலங்காரமான சொற்களுடன் அர்த்தங்களின் சுமை தாங்காமல் தடுமாறும் கவிதையைப் பற்றி என்ன சொல்வது? இதன் விளைவாக பின் நவீனத்துவம் ஒரு புதிய எழுத்து முறையை முன் வைக்கிறது. அதன் பெயர் பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறை (zero degree writing) இந்த எழுத்து முறை அலங்காரம் தவிர்த்த, மிகையுணர்ச்சி அற்ற, உருவகம் படிமம அற்ற, பூஜ்யமாக்கப்பட்ட மன நிலையுடன் உருவாகும் மொழியாகும். அப்படிப்பட்ட மொழியால் மட்டுமே ஒரு பின் நவீன இலக்கியப் பிரதி சாத்தியம்.

நிலப்பிரபுத்துவம் மற்றும் அது சார்ந்த மன்னராட்சி மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கட்டிக் கொண்டு குடியிருந்தது. அதற்கேற்ப அந்தக் காலக் கவிதைகள் சொல் அலங்காரங்களுடன் படாடோபமாக இருந்தன.அவை மண்ணில் கால் பாவாமல் மிதந்தன. பின்னாளில் முதலாளித்துவம் தோன்றி அது உருவாக்கிய தொழில் நகரங்கள் உருவான போது அந்தச் சூழலுக்கேற்ப தரையில் காலூன்றி நடக்கும் இயல்பான கவிதைகள் பிறந்தன.முதலாளித்துவம் மனிதனை அந்நியமாக்கியது. அந்த அந்நியமாதலை அக்கால எழுத்துக்களும், கவிதைகளும் எடுத்துரைத்தன. தனி மனிதனின் அவஸ்தை, உளவியல் நெருக்கடி, பொருளாதார சீர்குலைவு, குடும்பங்களின் சிதைவு ஆகிய நவீனத்துவத்தின் பிரச்சனைகளை முன்னிறுத்தின.

கவிஞர் சி. மணி தனது கவிதையில், நிகழ் காலம் என்ற தலைப்பில் நவீனவாழ்க்கையின் நெருக்கடி பற்றி பின் வருமாறு கூறுவார்:

பின்னாலும் போகவில்லை/முன்னாலும் போகவில்லை/நடுக்கிணற்றில் நிகழ்காலம்

நவீன வாழ்க்கை என்பது பாதிக் கிணற்றை தாண்டிய கதையாக இருக்கிற்து என்பது அவர் பார்வை. இன்னொரு கவிஞர் சோரா நிலவைப் பற்றி பின் வருமாறு எழுதுவார்:

நீரில் படிந்த நிலவு/மீண்டும் மீண்டும் உடைத்தாலும்/திடமான முத்திரைதான்
ஈழக் கவிஞர் சுகன் தனது கவிதையில்,

ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளைகள்
இடுப்பிலிருந்து இறங்கி
போராளியாய்ப் போனது ஒன்று
இங்கு ஓடி வந்தது ஒன்று
நீதி கேட்டுத் தாய் ஓடினாள்
மன்னன் சாலமன் சபையில் விசித்திரம்...

என்று அல்லல் படும் ஈழத்தமிழர் நிலை பற்றி எழுதுகிறார். வரலாற்றில் சாலமன் என்ற ம்ன்னனைப் பற்றிய ஒரு விவரணை உண்டு. அவன் பெரிய நீதிமான் என்பார்கள். ஈழத்தமிழர் பிரச்சனையை அவர் சபைக்கே கொண்டு போகிறாளாம் அந்தத் தாய்.

நவீனத்துவம் தொல்வியடைந்து விட்டது. அது முன் வைத்த ஜனநாயகம், சோஷியலிஸம், மதச்சார்பின்மை, நீதி போன்ற கருத்தியல்கள் வெறும் சொல்லாடல்களாகவே நின்று விட்டன. இந்தியா போன்ற பின் காலனிய நாடுகள் அந்நியராட்சியிலிருந்து விடுதலை பெற்று விட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைத்து விடும் என்று நம்பின. யதார்த்தம் அப்படி இல்லை என்றாகிவிட்டது. ஒரு காலத்தில் அந்நியர்கள் நேரடியாக ஆட்சி செய்தார்கள். இப்போது மறைமுகமாக ரிமோட் கண்ட்ரோலில் ஆட்சி செய்கிறார்கள். ஒரு காலத்தில் வேலை தேடி மனிதன் வெளிநாடு போனான்; இன்று வேலை அவனைத் தேடி அவன் நாட்டுக்கே வருகிறது. கணிணி முன் உட்கார்ந்து வேலை செய்யும் அவனுக்குத் தன் முதலாளி யார் என்று தெரியாது. அதைப் போலவே அந்த முதலாளிக்கும் இவன் யார் என்று தெரியாது. இங்கு Reality என்பது Virtual reality ஆகி விட்டது. அதாவது உண்மை இருந்த இடத்துக்கு உண்மையைப் போன்ற உண்மை வந்து விட்டது. இன்றைய சமூகம் நுகர்வோர் சமூகம் ஆகிவிட்டது. பண்டங்கள் நம்மை ஆள்கின்றன. மார்க்ஸ் சொன்ன முதலாளி - தொழிலாளி பிரச்சனையை விட உற்பத்தி செய்யப்படும் பண்டங்களை நுகர்வோன் தலையில் கட்டுவது தலையாய பிரச்சனை ஆகிவிட்டது. தமிழன் அண்டார்ட்டிகாவில் கணிணியின் முன் உட்கார்ந்து கொண்டு பனைமரத்தை வரைந்து பார்க்கிறான். அவனது வெள்ளைக்கார மனைவி கெண்டக்கி சிக்கனை மென்றபடி, டி.வி.யில் மைக்கேல் ஜாக்ஸனை ரசித்தபடி தன் கருப்பையில் திராவிட சிசுவைச் சுமக்கிறாள்.இது ஒரு பின் நவீன நிலவ்ரம்.
இத்தகைய பின் நவீன நிலவரத்தை வைத்து ஈழக் கவி ஜெயபாலன் எழுதினார்:
’யாழ் நகரில் என் பையன்/கொழும்பில் என் பெண்டாட்டி/வன்னியில் என் தந்தை/தள்ளாத வயதினிலே/தமிழ் நாட்டில் என் அம்மா/சுற்றம் ஃபிராங்க்பர்ட்டில்/ஒரு சகோதரியோ ஃப்ரான்ஸ் நாட்டில்/நானோ/ வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்/ஓஸ்லோவில்’

ஜெர்மானிய தத்துவஞானி நீட்ஷே கடவுளின் மரணத்தை அறிவித்தார். ஃபிரெஞ்சு சிந்தனையாளர் ரொலாண் பார்த் மனிதனின் மரணத்தை அறிவித்தார். நாம் மனிதர்கள் அல்ல. எண்கள். அடையாள் அட்டை எண். தொலை பேசி எண். கிரடிட் கார்ட் எண். வங்கிக் கணக்கு எண். என்று எண்களாக அடையாள்ப்படுத்தப் படுபவர்கள் நாம். இது இந்த யுகத்தின் பிரச்சனை.இது ஒரு அடையாளப் பிரச்ச்னை. இதுதான் பின்நவீனத்துவப் பிரச்சனை. இத்தகைய பின் ந்வீனத்துவச் சூழலில் எழுதப்படும் கவிதை இந்தச் சூழலைப் பதிவு செய்வதாக இருக்க வேண்டும். பின் நவீனத்துவம் hyper real என்று சொல்லப்படும் நகல் உண்மைகளைப் பற்றிப் பேசுகிறது. அப்ப்டியானால் நாம் hyper text ஐ உருவாக்க வேண்டும். பின் நவீனத்துவம் deconstruction என்று சொல்லப்படும் கட்டவிழ்ப்பைப் பற்றிப் பேசுகிற்து. அப்படியானால் நாம் நமது கவிதை மூலம் நமது சமூக அமைப்பைக் கட்டவிழ்க்கவேண்டும். பின் நவீனத்துவம் meta-poetry எனப்படும் மீ-கவிதை பற்றிப் பேசுகிறது. நாம் மீ-கவிதை எழுத வேண்டும் பின் காலனிய நாட்டில் வாழும் எழுத்தாளர்களின் எழுத்துகளை பின் கால்னிய எழுத்து என்று வகைப் படுத்துகிறார்கள். பின் காலனிய எழுத்து என்பதும் பின் நவீன்ம் சார்ந்ததே. இதனை பின் காலனிய மனச்சுமை என்கிறார் சல்மான் ருஷ்டி.

இப்போது இரண்டு பின் நவீன கவிதைகளைப் பார்ப்போம்:

புலம் பெயர்ந்த ஈழக்கவிஞர் சுகன் எழுதிய நீ போராளியல்ல என்ற தலைப்பிட்ட கவிதை இது.

உன் இன்னுயிரை ஈந்தது போதும்
லோகிதாசா எழுந்திரு
செய்திகளைச் செவி மடுத்த உங்கள் அனைவருக்கும்
நன்றி எனக்கூறி விடை பெறுகிறார் அறிவிப்பாளர;
லோகிதாசா எழுந்திரு
நாடகம் முடிந்த பின்
உன்னை வழமை போல கூட்டிப் போக
அப்பா வந்திருக்கிறார்
லோகிதாசா எழுந்திரு
கண்டியரசனில் உன் மாமா உன்னை உரலில்
போட்டு இடிக்க அம்மா பார்திருந்து அழுகிறாள்
அரிச்சந்திர நாடகத்தில்
நீ பாம்பு தீண்டி இறக்கிறாய்
எழுந்திருக்க மாட்டாமல் நீள் துயில் கொள்கிறாய்
இப்போது
இடையில் திரை மூடி அடுத்த காட்சி தொடங்கலாம் நாடகத்தில்
லோகிதாசா எழுந்திரு
நீ போராளியல்ல; குழந்தைப் பாத்திரம்தான்

இந்தக் கவிதையில் உவமை இல்லை; உருவகம் இல்லை; சொல் அலங்காரம் இல்லை. இது மேலெந்தவாரியாகப் பார்ப்பதற்கு அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசன் வேடம் போட்ட சிறுவன் பாம்பு கடித்து இறக்கும் காட்சியில் படுத்தவன் பின்பு எழாமல் இருப்பதைக் கூறுகிறது. கூர்ந்து கவனிக்கும் போது இது வேறு எதையோ சொல்ல வருவது தெரிகிறது. கடைசி வரியில், ’இடையில் திரை மூடி அடுத்த காட்சி தொடங்கலாம் நாடகத்தில்;. லோகிதாசா எழுந்திரு; நீ போராளியல்ல், ஒரு குழந்தைப் பாத்திரம்’ என்று முடிக்கும் போதுதான் இது ஈழப் பிரச்சனை பற்றிய கவிதை என்று தெரிகிற்து. சமீபத்திய ஈழப் போரில் போராளிகள் மட்டுமல்ல; பல குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள் என்ற அக்கிரமத்தையும் ஈழத்தில் தற்போது நிலவும் சூழ்னிலையை ’திரை மூடி அடுத்த காட்சி தொடங்கலாம் நாடகத்தில்’ என்று கவிஞர் சொல்வதையும் நாம் ஊகித்து உணரலாம். ஒன்றைச் சொல்லி வேறு ஒன்றை உணர்த்தும் பண்பு இது. இது ஒரு பின் ந்வீனத்துவக் கூறு. இதனை allusion என்று சொல்வார்கள். உவமை, உருவகத்துடன் இதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. தாமரை போன்ற முகம் என்பது உவமை. முகத்தாமரை என்பது உருவகம். இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்டது allusion. இலங்கைப் போரில் பல குழந்தைகள் கொல்லப்பட்ட அவலத்தை இக்கவிதை மனதைத் தொடுமாறு சொல்கிறது.

அடுத்த கவிதை பிரேசில் நாட்டுக் கவிஞர் கார்லோஸ் ஆண்ட்ரேட் எழுதியது.

என் பேனா எழுதத் தவறிய
அந்த ஒரு வரியை
யோசித்துக் கொண்டிருந்ததில்
ஒரு மணி நேரம் வீணாததுதான் மிச்சம்
அதனால் என்ன?
அந்த வரி எனக்குள் உயிருடன் இருக்கிறது
முணுமுணுத்தவாறே
அதுதான் இக்கணத்தின் கவிதை.

இந்தக் கவிதை மிகச் சிறந்த கவிதை என்பது இன்னும் எழுதப்படவில்லை என்ற செய்தியைச் சொல்கிறது. இது இரண்டு விதமான பொருள் படுத்தலை உண்டாக்குகிறது.
ஒன்று: இக்கணத்தின் கவிதை என்ற சொல்லை மிகப் புதிய சிந்தனையுள்ள கவிதை என்று சீரியஸாகப் பொருள் கொள்ளலாம். இக்கணத்தின் கவிதை எனக்குள் சூல் கொண்டிருக்கிறது; அதை சுட்ச்சுடத் தரப்போகிறேன் என்று ரொமாண்டிசிசவாதிகள் மீதான கிண்டலாகவும் எடுத்துக் கொள்ளலாம். மரபார்ந்த உவமை, உருவகம் போன்ற அலங்காரங்கள் ஏதுமின்றி இக்கவிதை சிறப்பாக அமைந்திருக்கிறது. பின் நவீனத்துவத்தின் இன்னொரு கூறு பகடி. ஆங்கிலத்தில் parody என்று சொல்வார்கள். ஒரு பின் நவீன கவிஞர் ’குஜராத்தில் கலவரம் ரயில் பெட்டிக்குத் தீ வைப்பு ; பம்பாயில் தொடர் குண்டு வெடிப்பு பலர் படு காயம்’ என்பது போன்ற தினப்பத்திரிகை செய்தித் த்லைப்புகளை வரிசையாக எழுதி விட்டு ,கடைசியில் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று. என முடித்திருந்தார். இதில் அவருடைய சொந்தமான சொல் ஒன்று கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி வாசகங்கள் ஏற்கெனவே செய்தித்தாள்களில் வெளி வந்தவை. கடைசி வரிகளும் பாரதியாரின் பாடல் வரிகளே. ஆக, ஏற்கெனவே இருந்த சொற்களை இணைத்து புதிய அர்த்தம் வருமாறு அவர் செய்தார். இதுதான் hyper real text ஆகும். அவர் சுதந்திர இந்தியாவை மட்டும் பகடி செய்யவில்லை. பாரதியாரையும் பகடி செய்கிறார். இதுவும் பின் நவீன கவிதையே. இது போல் பலவிதமான சோதனை முயற்சிகளுக்கு பின் நவீனத்துவம் இடம் கொடுக்கிறது. இலக்கியத்தை அதன் தளைகளிலிருந்து விடுவிக்கிறது. வாசிப்பு ஜனநாயகத்தை முன் வைக்கிறது.

இந்த நெடிய இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியாகவே, பொன்மாலைப் பூக்கள் என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு வெளி வந்திருப்பதாக நாம் கருதலாம். பெரும்பாலான கவிதைத்தொகுப்புகளைப் போலவே, இதிலும் கவிதை போன்ற கவிதைகள், கவிதையாக மாற முயற்சிக்கும் கவிதைகள், கவிதையாக இயங்கும் கவிதைகள் என்று மூன்று விதமாக பிரித்துப் பார்க்கலாம்.. இப்படிப் பிரித்துப் பார்க்கும் தன்மை விமர்சனம் சார்ந்தது. விமர்சனம் என்றால் ஜெர்மானியத் தத்துவஞானி இம்மானுவேல் காண்ட் ஆரம்பித்து வைத்த ருசி சார்ந்த விமர்சனம் அல்ல. அத்தகைய விமர்சனத்தைத்தான் க்.நா.சு., வெங்கட்சாமிநாதன் போன்றோர் தமிழில் வளர்த்தெடுத்தார்கள். இலக்கியம் என்பது நரசுஸ் காபி அல்ல பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு’ என்று சொல்ல. அது விஞ்ஞான ரீதியான ஆய்வு சார்ந்தது. அதன் பெயர் பிரதி இயல் ஆய்வு. அத்தகைய ஆய்வே பின் நவீன ஆய்வு. இப்படிப்பட்ட விமரிசனத்தைத்தான் ரொலாண் பார்த், பால் டெ மான் போன்றோர் அறிமுகப்படுத்தினார்கள். அப்படி ஒரு பிரதி இயல் ஆய்வை மேற்கொள்ளும் போது இதிலுள்ள கவிதைகள் என்ன ஆகின்றன?

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் கவனம் ஈர்க்கக்கூடிய நவீன கவிதைகளாக கீழ்க்கண்ட கவிதைகளைச் சொல்லலாம்.

கவிஞர் க்.து.மு. இக்பால், கவிஞர் செல்வா ஆகியோர் எழுதிய தண்ணீர் பற்றிய கவிதைகள் நல்ல கவிதைகள்.புல்லங்குழல் என்ற தலைப்பில் கவிஞர் சி. கருணாகரசு, கவிஞர் இராம வைரவன் ஆகியோர் எழுதியிருக்கும் க்விதைகள் உருவகம், உவமையில் சிறப்பாக இருக்கின்றன. இராம வைரவன் புல்லாங்குழலை பூதவுடலுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது நல்ல கற்பனை. வலி என்ற தலைப்பில் கவிஞர் செல்வா, இளையர் தமிழ் என்ற தலைப்பில் கவிஞர் பரவை அழகிரி ஆகியோர் எழுதியிருக்கும் கவிதை ஆகியன நன்றாக வந்திருக்கின்றன. தியாகம் என்ற தலைப்பில் கவிஞர் இளங்கோவன் எழுதி இருக்கும் கவிதையில் எள்ளல் துள்ளலுடன் இருக்கிறது. கவிஞர் முத்துப்பேட்டை மாறனின் நிழல் தேடும் சூரியன் என்ற கவிதையில் அனைவரையும் தனது உக்கிரமான் வெப்பத்தால் சுட்டெரிக்கும் சூரியன் மாலை வந்ததும் தானே நிழல் தேடித் தஞ்சம்டைகிறான் என்பது சுவாரஸ்யமான சிந்தனை. இவை எல்லாம் நவீனகவிதைகள். இவை நவீன வாழ்வின் கசப்பை, வலியை, அவலத்தை விவரிக்கின்றன. இக்கவிதைகளில் க்.து.மு இக்பாலின் கவிதை சர்வதேசத்தனமை கொண்டு திகழ்கிறது. மற்ற கவிதைகளில் மரபுத்தமிழ் கவிதையின் வாசனை அடிக்கிறது. சில கவிதைகளில் கவியரங்கக்கவிதை பாணி தெரிகிறது. தலைப்புக் கொடுக்கப்பட்டு வாசிக்கப் படுவதால் இப்பண்பு வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இவற்றை குறை என்று சொல்ல முடியாது. புதுக் கவிதை என்பது தமிழ்க்கவிதையாக இருப்பினும் அந்த எல்லையைக் கடந்து உலகக்கவிதையாகச் சென்றடைய வேண்டும் அதற்கு மொழித் திறன மட்டும் போதாது. மொழித் திறன் அந்த மொழிக்காரானால் மட்டுமே ரசிக்கப்படும். மொழியை மீறிய கவிதை மட்டுமே உலகைச் சென்றடைய முடியும். எனவே இந்தக் கவிஞர்கள் மரபுத்தமிழ் பாதிப்பிலிருந்து விடுபட வேண்டும்.

இத்தொகுப்பில் நவீனத்துவத்தைத் தாண்டி பின் நவீன எல்லைக்குள் பிரவேசிக்கும் கவிதைகளும் இருக்கின்றன. வார்த்தை அலங்காரம், உருவகம், உவமை போன்ற சுமைகள் இன்றி, வாழ்க்கையின் முட்களால் கீறப்பட்ட ஆன்மாவாய் ரத்தம் வடிக்கும் ஆன்ம சோகத்தை பகடி (parody) யாக வெளிப்படுத்தும் கவிதைகள் அவை. இந்த எள்ளல் தனமை பின் நவீனத்துவக் கூறு ஆகும்.

தண்ணீர் என்ற தலைப்பில் புதுமைத்தேனீ மா. அன்பழகன் எழுதியிருக்கும் கவிதை கவிஞனின் கோபத்தை நகை முரணாக மாற்றிப் போடுகிற்து.

மலையிலிருந்தும்/மழையிலிருந்தும்/மண்டி வரும் தண்ணீரைத்/தாண்டிப் போக விடமாட்டோம்/செப்பும் செம்மல்களே / கல்னெஞ்சக் கன்னடர்களே/திறக்காதீர்கள்/
அள்வுக்கு மேல் நீர் வந்த போதும்/மடை திறக்காதீர்கள்/ நாங்கள் நீரின்றிச் சாவதைப் போல்/ நீங்கள் நீர் மூழ்கிச் சாவுங்கள்

இக்கவிதையில் ’அளவுக்கு மேல் நீர் வந்த போதும் மடை திறக்காதீர்கள்’ என்று கட்டளை இடும் கவிஞர் அதற்கு அடுத்த வரியிலேயே ‘நாங்கள் நீரின்றிச் சாவதைப் போல் நீங்கள் நீர் மூழ்கிச் சாவுங்கள்’ என்று விரக்தி கலந்த நகைச்சுவையுடன் முடிகிறது.

அடுத்த கவிதை கவிஞர் நீதி பாண்டியனுடையது. இது ஒருவரை பேட்டி எடுப்பது போன்ற வடிவத்தில் ஆக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் வடிவப் பரிசோதனை செய்வது ஒரு பின் நவீனத்துவக் கூறாகும்.

அடுத்த பிறவியில்/நீங்கள் யாராக ப் பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?/நம்பிக்கை இல்லை/இல்லை, இருந்தால், பிறாந்தால்/ ஓர் ஆட்டுக்குட்டியாக?/இல்லை/மனிதர்களில்/ம்.. அழுவதற்கு முன் இற்ந்து விடும் சிசுவாக.

இந்தக் கவிதை சர்வ சாதாரணமாக ஆரம்பித்து முடியும் போது நம் மனசைக் குலுக்கிப் போடுகிறது. வலி என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இக்கவிதை மனத்தின் சமனிலையைக் குலைக்கிறது. கவிதை என்பது மாலை நேர விருந்தல்ல. கேளிக்கை விளையாட்டுமல்ல. உலகப் போரின் போது ஆஷ்விட்ஸ் என்னுமிடத்தில் ஹிட்லரால் உருவாக்கப்பட்ட வதை முகாமில் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு கொடுமை நடந்த பின்னரும் ஒருவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தால் அது காட்டுமிராண்டித்தனம் என்றார் ஜெர்மானிய அறிஞர் தியோடார் அடோர்னோ. அதையும் மீறி நாம் கவிதை எழுதுவதாக இருந்தால் அது வழக்கத்துக்கு மாறான கவிதைகளாக இருக்க வேண்டும் இத்தொகுப்பில் அப்படிப்பட்ட கவிதைகள் இருக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அதற்காக இவற்றை எழுதிய கவிஞர்களையும் இந்தக் கவிதைகள் அரங்கேறுவதற்கேற்ப கவி மாலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வரும் த்ரு மா அன்பழகன் அவர்களையும், இத்தொகுப்பு வெளிவரக்காரணமாக இருந்த அன்பர்களையும் நான் பாராட்டுகிறேன்.

***

No comments:

Post a Comment